தேசிய வளர்ச்சி அமைச்சரும் வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டெஸ்மண்ட் லீ, அந்தக் குழுத் தொகுதிக் குடியிருப்பாளர்களின் தேவைகள் கவனிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் பதவி விலகியதை அடுத்து அவர் இவ்வாறு கூறினார்.
கடந்த ஜுலை மாதம் முதல் தாமும் வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியின் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு ஆங் வெய் நெங், திருவாட்டி ஃபூ மீ ஹார், திருவாட்டி ரேச்சல் ஓங் ஆகியோருடன் பைனியர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பேட்ரிக் டேயும் நாடாளுமன்ற உறுப்பினராகத் திரு ஈஸ்வரனின் ஆற்றவேண்டிய கடமைகளை நிறைவேற்றுவதாக அமைச்சர் லீ கூறினார்.
தாங்கள் அனைவரும் அவ்வாறே தொடர்ந்து சேவையாற்றுவோம் என்றும் குடியிருப்பாளர்களின் தேவைகள் பூர்த்தியாவதை உறுதிசெய்வோம் என்றும் அமைச்சர் லீ தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
திரு ஈஸ்வரன் மீது ஜனவரி 18ஆம் தேதி ஊழல் உள்ளிட்ட 27 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அதைத் தொடர்ந்து அவர் பதவி விலகுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
திரு ஈஸ்வரன் இத்தகைய சூழலில் வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவது குறித்து வருத்தம் தெரிவித்த அமைச்சர் லீ, சமூகத்திற்கு திரு ஈஸ்வரன் ஆற்றிய பங்களிப்பிற்கு நன்றி தெரிவித்தார்.