சட்டவிரோத கும்பல்களுக்கு உடந்தையாக இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஏழு பேர் மீது ஜனவரி 11ஆம் தேதியன்று குற்றம் சுமத்தப்பட இருக்கிறது.
அவர்களில் ஐந்து ஆடவர்களும் இரண்டு பெண்களும் அடங்குவர். அனைவரும் 19 வயதுக்கும் 52 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
இவர்கள் சட்டவிரோத கும்பல்களிடம் தங்கள் வங்கிக் கணக்குகளை அதிகபட்சம் $3,000க்கு விற்பனை செய்ததாக அல்லது வாடகைக்கு விட்டதாகக் காவல்துறை கூறியது.
வங்கிக் கணக்குகளைத் திறந்து, அவற்றுக்கான தானியங்கி வங்கி இயந்திர அட்டைகளையும் இணைய வங்கி தனிநபர் அடையாள எண்களையும் சட்டவிரோத கும்பல்களிடம் இந்த ஏழு பேரும் தந்ததாக நம்பப்படுகிறது.
அவர்களில் இரு ஆடவர்கள், தங்கள் சிங்பாஸ் கணக்கு மறைச்சொல்லை சட்டவிரோத கும்பல்களிடம் விற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம் சட்டவிரோத கும்பல்கள் அவர்களது சிங்பாஸ் கணக்குகளைப் பயன்படுத்தி வங்கிக் கணக்குகளைத் திறக்க முடிந்தது.
மோசடிக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.