வங்கிகளுடன்15 வாரங்களாக ஒன்றிணைந்து செயல்பட்டு, மோசடியால் பாதிக்கப்பட்ட 15,000க்கும் மேற்பட்டோருக்கு காவல்துறை உதவியது. இதன்மூலம் $69.43 மில்லியனுக்கும் அதிகமான தொகை மோசடிக்காரர்களின் கைகளுக்குச் செல்வதைத் தடுக்க முடிந்தது.
வேலை மோசடி, முதலீட்டு மோசடி உட்பட மற்ற வகை மோசடிகளால் பாதிக்கப்பட்டோரை அடையாளம் காண காவல்துறையின் மோசடித் தடுப்பு நிலையம், டிபிஎஸ் வங்கி, யுஓபி வங்கி, ஓசிபிசி வங்கி, ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட் வங்கி ஆகியவை தானியங்கி இயந்திரவியல் செயல்முறையைப் பயன்படுத்தின.
கடந்த ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 31ஆம் தேதி வரை இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காவல்துறையும் வங்கிகளும் மோசடியால் பாதிக்கப்பட்டோருக்கு 48,000க்கும் அதிகமான குறுஞ்செய்திகளை அனுப்பின.
இதன்மூலம் 5,300 மோசடிகள் தடுக்கப்பட்டன.
“தானியங்கி இயந்திரவியல் செயல்முறையைப் பயன்படுத்தி காவல்துறையால் தகவல் பகிர்வு, தகவல் செயலாக்கம், அதிக அளவிலான குறுஞ்செய்திகளை ஒரே நேரத்தில் அனுப்புதல் ஆகியவற்றை தானியக்கமுறைக்கு மாற்ற முடிகிறது,” என்று ஜனவரி 9ஆம் தேதியன்று காவல்துறை கூறியது.
இந்தத் தொழில்நுட்பம் வாயிலாகக் குறுஞ்செய்தி கிடைத்த பிறகுதான் மோசடியில் சிக்கிய விவரம் பலருக்குத் தெரியவந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
பணப் பரிவர்த்தனைகளைத் தொடர வேண்டாம் என்று அந்தக் குறுஞ்செய்திகள் அவர்களுக்கு வலியுறுத்தி இருந்தன.
இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதியன்று கிரேட் ஈஸ்டர்ன் மற்றும் ஓசிபிசி வங்கியுடன் இணைந்து செயல்பட்ட காவல்துறை, அரசாங்க அதிகாரியாகப் பாசாங்கு செய்து மோசடி புரிந்தவர் விரித்த வலையை முறியடித்தது. இதன்மூலம் $250,000க்கும் அதிகமான இழப்பு நேர்வதைத் தடுக்க முடிந்தது.