சிங்கப்பூரில் கடந்த பத்தாண்டுகளில், 22 வார கர்ப்பகாலத்தின்போது குறைப்பிரசவத்தில் பிறந்த பிள்ளைகளில் ஒன்று மட்டுமே உயிர் பிழைத்ததாக உள்துறை மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணையமைச்சர் சுன் ஷுவெலிங் தெரிவித்துள்ளார்.
அந்தக் குழந்தை 166 நாள்கள் மருத்துவமனையில் தங்கி உயிர்காக்கும் சிகிச்சைகளைப் பெற்றதாக அவர் கூறினார்.
இத்தகைய சம்பவங்கள் அரிதானவை என்று குறிப்பிட்ட அவர், அது ஓர் அதிசயக் குழந்தை என்றார்.
நாடாளுமன்றத்தில் ஜனவரி 9ஆம் தேதி, பிரசவத்தின்போது குழந்தை இறந்து பிறத்தல், பிள்ளைப் பிறப்பு (இதர திருத்தங்கள்) மசோதாவின் இரண்டாம் வாசிப்பின்போது அவர் அவ்வாறு கூறினார்.
திருவாட்டி சுன், அரிதாக உயிர் பிழைத்த குழந்தையின் பெயரைக் குறிப்பிடவில்லை. இருப்பினும் இணையத்தில் தகவல் தேடியபோது, 2018ஆம் ஆண்டு பிறந்த அக்குழந்தையின் பெயர் செல்ஸி கியூ எனத் தெரிகிறது. அக்குழந்தை உயிர் பிழைக்க கிட்டத்தட்ட வாய்ப்பே இல்லை என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர்.
மசோதா, ஜனவரி 9ஆம் தேதி நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றது.
அந்த மசோதாவில் இடம்பெற்றுள்ள இரண்டு முக்கியத் திருத்தங்களில் ஒன்று, பிரசவத்தின்போது குழந்தை மரித்தல் என்ற சொற்றொடர் 24 வார கர்ப்பத்திற்குப் பிறகு இறந்தே பிறக்கும் குழந்தைக்கு மட்டுமே பொருந்தும் என்பதாகும். தற்போது 22 வார கர்ப்பத்திற்குப்பின் அவ்வாறு பிறக்கும் பிள்ளைகளுக்கு அந்தச் சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது.
குறைந்தபட்சமாக 24 வார கர்ப்பகாலம்தான் குறைப்பிரசவத்தில் பிறந்த பிள்ளை கர்ப்பப்பைக்கு வெளியே உயிர்வாழத் தகுதியானது என்று உள்ளூர் மருத்துவ, அறிவியல் ஆதாரங்கள் காட்டுவதாக திருவாட்டி சுன் குறிப்பிட்டார்.
சுகாதார அமைச்சு, 2018, 2022ஆம் ஆண்டுகளில் மேற்கொண்ட மறுஆய்வுகளில், 22 வார கர்ப்பத்தின்போது பிறக்கும் பிள்ளைகள் உயிர்வாழ்வதற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட பூஜ்ஜியம் என்று உள்ளூர் வல்லுநர்கள் கூறியிருந்தனர். 24 வார கர்ப்பத்தில் குறைப்பிரசவமாகப் பிறக்கும் பிள்ளைகள் உயிர்பிழைக்க கிட்டத்தட்ட 50 விழுக்காடு வாய்ப்பிருப்பதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
“இதனால்தான் 1974ஆம் ஆண்டின் கருக்கலைப்புச் சட்டத்தில் 24 வார கர்ப்பகாலத்திற்குப் பிறகு கருக்கலைப்பு அனுமதிக்கப்படாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது,” என்று திருவாட்டி சுன் கூறினார்.
மசோதாவில் குறிப்பிடப்பட்ட இரண்டாவது திருத்தத்தின்கீழ், இறந்தே பிறந்த குழந்தையின் பெயரை அது அவ்வாறு பிறந்த ஓராண்டுக்குள் பெற்றோர் விரும்பினால் பிறப்புப் பதிவேட்டில் பதிந்துகொள்ளலாம். தற்போதைய பதிவுமுறையின்கீழ் அவ்வாறு செய்ய இயலாது.