வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனை வீடுகளின் விலை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 0.6 விழுக்காடு அதிகரித்தது.
கடந்த நவம்பர் மாதத்தில் அது 0.4 விழுக்காடு ஏற்றம் கண்டிருந்தது.
ஆண்டு அடிப்படையில் மறுவிற்பனை வீடுகளின் விலை 5.8 விழுக்காடு அதிகரித்தது.
இது 2022ஆம் ஆண்டில் பதிவான 8.8 விழுக்காடு அதிகரிப்பைவிட குறைவு என்று ஜனவரி 8ஆம் தேதியன்று சொத்து இணையவாசல்களான 99.co மற்றும் எஸ்ஆர்எக்ஸ் தெரிவித்தன.
இது ஒருபுறம் இருக்க, கடந்த ஆண்டு 470 வீவக வீடுகள், ஒவ்வொன்றும் குறைந்தது $1 மில்லியனுக்கு விற்கப்பட்டன. 2022ஆம் ஆண்டில் குறைந்தது $1 மில்லியனுக்கு விற்கப்பட்ட 369 மறுவிற்பனை வீடுகளைவிட இது 27 விழுக்காடு அதிகம்.
கடந்த ஆண்டு குறைந்தது $1 மில்லியனுக்கு விற்கப்பட்ட வீடுகளில் 48 வீடுகள் டிசம்பர் மாதம் விற்கப்பட்டன.
இருப்பினும், கடந்த ஆண்டு வீவக மறுவிற்பனை வீடுகளின் விலை அதிகரிப்பு மெதுவடைந்ததாக சொத்துப் பகுப்பாய்வாளர்கள் கூறினர்.
மறுவிற்பனை வீடுகளின் விலை சீரடைவதை இது காட்டுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த டிசம்பர் மாதத்தில் தொடர்ந்து எட்டாவது மாதமாக மாதாந்திர மறுவிற்பனை விலை ஒரு விழுக்காட்டுக்குக் குறைவாக உயர்ந்தது அல்லது சரிவு கண்டதாக ஆரஞ்சுடீ அண்ட் டாய் சொத்து நிறுவனத்தின் ஆராய்ச்சி, பகுப்பாய்வுப் பிரிவின் மூத்த உதவித் தலைவர் திருவாட்டி கிறிஸ்டின் சன் கூறினார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மறுவிற்பனை விலை 0.6 விழுக்காடு குறைந்தது.
உயர் வட்டி விகிதங்கள், ஆட்குறைப்பு செய்யப்படும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, பொருளியல் மெதுவடையும் நிலைக்கான எதிர்பார்ப்பு ஆகியவற்றின் காரணமாக தற்போதுள்ள வீட்டைவிட அதைவிட பெரிய வீட்டை வாங்கும் திட்டத்தை வீட்டு உரிமையாளர்கள் சிலர் ஒத்திவைத்துள்ளதாக இஆர்ஏ சிங்கப்பூர் சொத்து நிறுவனத்தின் தலைமை மேலதிகாரியான யூஜீன் லிம் தெரிவித்தார்.
“குறுகியகால கடன் அடைப்பு காலத்துக்குத் தகுதி பெறுவதால் நடுத்தர வயது வீவக வீட்டு உரிமையாளர்கள் ஆக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தற்போதைய வீட்டை விற்று அதைவிட பெரிய வீட்டை வாங்கும் திட்டத்தை அவர்கள் மறுபரிசீலனை செய்கின்றனர்,” என்று அவர் கூறினார்.
கடந்த நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் டிசம்பர் மாதத்தில் குறைவான மறுவிற்பனை வீடுகள் விற்கப்பட்டன.
கடந்த நவம்பர் மாதத்தில் 2,138 மறுவிற்பனை வீடுகள் விற்கப்பட்டன.
டிசம்பர் மாதத்தில் அதைவிட 6.2 விழுக்காடு குறைவான மறுவிற்பனை வீடுகள் விற்கப்பட்டன.
2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 10.5 விழுக்காடு குறைவு.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 6,000க்கும் அதிகமான பிடிஓ வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டதாகவும் இது மறுவிற்பனை வீடுகளுக்கான தேவையை சற்று குறைத்திருக்கக்கூடும் என்றும் ஹட்டன்ஸ் ஏஷியா சொத்து நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்க் யிப் தெரிவித்தார்.