73 வயது மாது ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். சிராங்கூனில் ஜனவரி 5ஆம் தேதி அச்சம்பவம் நடந்தது.
கார் நிறுத்துமிடத்திலிருந்து இடதுபுறமாக வெளியேறிய கார், சாலையின் குறுக்கே செல்கிறது. எதிர்வந்த போக்குவரத்தைக் கடந்து, இரு தடங்களைத் தாண்டி சாலையைப் பிரிக்கும் தடுப்பைக் கடந்து, ஒரு மரத்தருகே சென்று மோதி நிற்பதை இணையத்தில் பகிரப்பட்ட காணொளி காட்டியது.
மாலை 6 மணியளவில் சிராங்கூன் செண்ட்ரலில் மூன்று கார்கள் சம்பந்தப்பட்ட விபத்து குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் ஜனவரி 6ஆம் தேதி தெரிவித்தன.
விபத்துக்குள்ளான காரின் ஓட்டுநருக்கு, அவ்வழியில் சென்ற ஐவர் உதவச் சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் சீன நாளிதழான ஷின் மின்னிடம் தெரிவித்தார்.
சிறிது நேரம் தனது காரில் அமர்ந்திருந்த அந்த மாது, காரிலிருந்து வெளியேற வழிப்போக்கர்கள் உதவினர். அவர் கைத்தடி வைத்திருந்தார்.
அந்த மாது டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்று சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் சுயநினைவுடன் இருந்ததாக காவல்துறை தெரிவித்தது.
விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.