புக்கிட் தீமா விரைவுச்சாலையில் புதன்கிழமை அன்று கனரக வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. டர்ஃப் கிளப் அவென்யூ நோக்கி வெளியேறும் சாலை வழிக்கு முன்பு இவ்விபத்து நடந்தது.
கனரக வாகனம் ஒன்று கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருப்பதையும் அதன் தீப்பிழம்பு சாலையோரத்தில் இருக்கும் மரங்கள் வரை சென்றதையும் சமூக ஊடகத்தில் பரவிய காணொளியில் காண முடிந்தது.
இந்தத் தீவிபத்துக் குறித்துத் தங்களுக்குப் புதன்கிழமை இரவு 8.00 மணியளவில் தகவல் கிடைத்தது என்றும் இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை என்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
கனரக வாகனத்தில் இருந்த பொருள்கள் தீயில் எரிந்து நாசமாயின.
இரு குழாய்கள் மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடித்துத் தீயை அணைத்ததாக அது தெரிவித்தது.
தீ விபத்துக்கான காரணம் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.