மத்திய விரைவுச்சாலையில் வெள்ளிக்கிழமை மதியம் ஏற்பட்ட வாகன விபத்தில் 51 வயது மாது பயணம் செய்த கார் தலைகுப்புற கவிழ்ந்தது.
இதைத் தொடர்ந்து அந்த மாது டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
விபத்தில் ஓட்டுநரைத் தவிர மாது ஒருவர் மட்டுமே அந்த வாகனத்தில் இருந்ததாக காவல்துறை கூறியது. மேலும், மருத்துவமனைக்கு அந்த மாது கொண்டு செல்லப்பட்டபோது அவர் சுயநினைவுடன் இருந்தார் என்றும் கூறப்படுகிறது. இதில் வாகனமோட்டி காயம் ஏதும் இன்றி தப்பித்தார் என்றும் அறியப்படுகிறது.
இந்த விபத்து குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, வெள்ளிக்கிழமை மதியம் வாக்கில் மத்திய விரைவுச்சாலையில், ஜாலான் பஹாகியா துணைச்சாலைக்கு அருகே, வாகனம் ஒன்று அதுவாகவே சறுக்கி விபத்துக்குள்ளானதாக கூறியது.
விரைவுச்சாலையின் ஆக வலப்பக்க தடத்தில் சாம்பல் நிற கார் ஒன்று சிதைந்த நிலையில் கிடப்பதை சமூக ஊடகப் படங்கள் காட்டின.
அந்த காருக்குப் பின்னால் காவல்துறை வாகனம் ஒன்றும் ‘இமாஸ்’ மீட்பு வாகனம் ஒன்றும் இருப்பது தெரிகிறது.
விபத்து குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.