இணையவழி பொய்யுரைக்கும் சூழ்ச்சித்திறத்துக்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தின்படி (பொஃப்மா), எதிர்க்கட்சி அரசியல்வாதியான கென்னத் ஜெயரத்னம் நடத்தும் ‘டிஆர்எஸ்’ என்ற இணையத்தளமும் அவருடைய ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், எக்ஸ், லிங்க்ட்இன் ஆகிய சமூக ஊடக கணக்குகளும் பண ரீதியாக பயன்பெற தடுக்கப்பட்டுள்ளன.
அவருடைய அந்த இணையத்தளமும் சமூக ஊடகக் கணக்குகளும் ‘டிக்ளேர்ட் ஆன்லைன் லோகேஷன்ஸ்’ எனப்படும் பிரகடனப்படுத்தப்பட்ட இணையத்தளங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.
இதன்படி, செவ்வாய்க்கிழமையிலிருந்து (டிசம்பர் 12) ஈராண்டுகளுக்கு அவருடைய ஒவ்வோர் இணையத்தளமும் பிரகடனப்படுத்தப்பட்ட இணையத்தளம் என்ற வாசகத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
இதனால், அந்த இணையத்தளங்களுக்குச் செல்பவர்கள் அவை அடிக்கடி பொய்ச் செய்திகளைத் தாங்கி வருவதால் அவற்றை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் எனத் தெரிந்துகொள்வர் என்று தொடர்பு, தகவல் அமைச்சு கூறியது.
திரு கென்னத் ஜெயரத்னத்திற்கு எதிரான இந்தப் பிரகடனத்தால் அவரது இணையத்தளங்கள் முடக்கப்பட வேண்டும் எனப் பொருள்படாது.
எனினும், பொஃப்மா சட்டத்தின்கீழ் பண ரீதியாக அவை அடுத்த ஈராண்டுகளுக்கு லாபம் அடைய முடியாது.