நினைவாற்றல் இழப்பு நோய் (டிமென்ஷியா) உள்ளவர்களுக்கு உகந்த முதல் அக்கம் பக்க வட்டாரமாகியுள்ளது இயோ சூ காங்.
நினைவாற்றல் இழப்பு நோயுள்ள குடியிருப்பாளர்கள் சிறப்பாக வாழவும் மூப்படையவும் உதவ, வண்ணமயமான, தனித்துவமான, எளிதில் அடையாளம் வைத்துக்கொள்ளக் கூடிய அம்சங்கள் இந்த வட்டாரத்தின் சில பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. இயோ சூ காங் வட்டாரம் முழுவதும் இவ்வம்சங்களை விரைவில் பெறவுள்ளன.
வட்டாரத்தின் மூன்று பகுதிகளுக்கான வடிவமைப்புகளை பிரதமர் லீ சியன் லூங்கும் இயோ சூ காங் நாடாளுமன்ற உறுப்பினர் யிப் ஹான் வெங்கும் சனிக்கிழமை வெளியிட்டனர்.
நினைவாற்றல் இழப்பு நோயுள்ளவர்கள், அவர்களின் பராமரிப்பாளர்கள் மற்றும் அவர்கள் சிங்கப்பூர் உயர்மாடிக் குடியிருப்புகளிலும் மக்கள் தொகை அதிகமாக உள்ள சூழலிலும் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சமூக ஆய்வைத் தொடர்ந்து இந்த அம்சங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு (ஏஐசி), வாழத்தகு நகரங்களுக்கான நிலையம் (சிஎல்சி), சிங்கப்பூர்த் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து மேற்கொண்ட நினைவாற்றல் இழப்பு நோய் உள்ளவர்களுக்கு உகந்த அக்கம்பக்க வட்டார ஆய்வைச் செய்தன. 100க்கும் மேற்பட்ட இயோ சூ காங் குடியிருப்பாளர்களும் நினைவாற்றல் இழப்பு நோயாளிகளின் பராமரிப்பாளர்களிடமிருந்து திரட்டப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நினைவாற்றல் இழப்பு நோயுள்ளவர்கள், அவர்களின் பராமரிப்பாளர்களின் தேவைகள், அனுபவங்களைப் புரிந்துகொள்ள காட்சி துணைக் கருவிகள், உணர்வைத் தூண்டும் கருவிகள் போன்றவற்றை ஆய்வாளர்கள் பயன்படுத்தினர்.
நினைவாற்றல் இழப்பு நோயுள்ளவர்கள் தங்கள் அக்கம்பக்க வட்டாரத்தில் சுறுசுறுப்பாகவும் சுதந்திரமாகவும் செயல்படுவதை உறுதி செய்வது ஆய்வின் நோக்கமாகும்.
முன்மாதிரி வட்டாரமான இயோ சூ காங், நீலக் கூடம் என்றழைக்கப்பபும் சமூக கூடல் இடத்தை உள்ளடக்கியது. அக்கம்பக்க வட்டாரத்தில் கிராம வாழ்வின் ஒன்றுபட்ட உணர்வை ஏற்படுத்த இந்த தனித்தன்மையான அம்சம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு முதியோர், அறிவுத் திறன் விளையாட்டுகளிலும் மற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடலாம்.
நினைவாற்றல் இழப்பு நோயுள்ள குடியிருப்பாளர்கள் முக்கியப் பகுதிகளை எளிதில் அடையாளம் காண்பதை உறுதிப்படுத்த, பிரகாசமான மஞ்சள் வட்டங்கள் வரையப்பட்டுள்ளன. இவை அருகிலுள்ள சந்தை போன்ற வட்டாரத்தின் முக்கியப் பகுதிகளுக்கு வழிகாட்டியாகவும் அமைந்துள்ளன.
சிங்கப்பூரின் மற்ற தொகுதிகளிலும் இத்தகைய அம்சங்கள் இடம்பெறவுள்ளன.
“நாடெங்கும் நினைவாற்றல் இழப்பு நோய் உள்ளவர்களுக்கு உகந்த வட்டாரங்களை உருவாக்க ஏஐசி உடன் இணைந்து பணியாற்றி வருவதாக சிஎல்சியின் ஆய்வு இயக்குனர் திருவாட்டி எலைன் டான் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகையிடம் கூறினார்.
இத்தகைய அம்சங்களால் எந்த வட்டாரம் அதிக அனுகூலத்தைப் பெறும் என்பதை நிர்ணயிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் திருவாட்டி டான் கூறினார்.