பிள்ளைகளுடன்கூடிய குறைந்த வருமானக் குடும்பத்தினரின் வாழ்க்கை மேம்பட நீண்டகால போக்கில் உதவி கிடைக்க உள்ளது.
அத்தகைய குடும்பங்களுக்குச் சமூக உதவிகளை வழங்குவதற்குப் பதிலாக அவற்றின் ஆற்றலை அதிகப்படுத்தும் அணுகுமுறையை அரசாங்கம் கடைப்பிடிக்கப்போகிறது.
சமூகத் தொடர்பு (காம்லிங்க்) என்ற வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் அதிக மானியத்துடன் கூடிய வாடகை வீடுகளில் பிள்ளைகளுடன் வசிக்கும் குடும்பங்களுக்குக் கூடுதல் உதவிகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும்.
அந்தக் கூடுதல் உதவிகள் மூன்று துறைகளில் குடும்பங்களுக்கு உதவும் வகையிலான திட்டங்களுடன் இணைந்து இருக்கும்.
முன்னேறும் சிங்கப்பூர் இயக்கத்தின் அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
காம்லிங்க் திட்ட குடும்பங்களுக்கு அதிக, நீண்டகால போக்கிலான நிதி உதவியை அரசாங்கம் அளிக்க முடியும் என்று அந்த அறிக்கை தெரிவித்தது.
இருந்தாலும் அத்தகைய குறைந்த வருவாய் குடும்பத்தினர், தொடர்ந்து வேலை பார்ப்பது, பிள்ளைகள் பாலர் பள்ளிக்குச் செல்வதை உறுதிப்படுத்துவது, சொந்தமாக வீடுவாங்க பணத்தைச் சேமிப்பது போன்ற நீண்டகால இலக்குகளை நிறைவேற்ற பாடுபட வேண்டும்.
அவை இப்படி செய்தால்தான் அவற்றுக்கு கூடுதல் நிதி உதவி கிடைக்கும்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி வெள்ளிக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் பேசினார்.
குறைந்த வருவாய்க் குடும்பத்தினருக்குக் கொடுக்கப்படும் அத்தகைய கூடுதல் நிதி ஊக்குவிப்புகள், தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள அவை எடுக்கும் முயற்சிகளை அங்கீகரித்து அந்த முயற்சிகளுக்கு உறுதுணையாகத் திகழும் என்று அமைச்சர் கூறினார்.
குறைந்த வருமானக் குடும்பங்களின் குறுகியகால சிரமங்களைக் குறைத்து அவற்றின் நீண்டகால திட்டங்களுக்கு ஆதரவு தருவது நோக்கம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
காம்லிங்க்+ என்ற அந்த புதிய அணுகுமுறை பற்றிய மேல் விவரங்கள் வரும் வாரங்களில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறனார்.
2019ல் தொடங்கப்பட்ட இப்போதைய காம்லிங்க் செயல்திட்டங்களை காம்லிங்க்+, அணுகுமுறை பலப்படுத்தும்.
இப்போதைய காம்லிங்க் செயல்திட்டங்கள் மூலம், பிள்ளைகளுடன் கூடிய குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு ஒருமுகப்படுத்தப்பட்ட, பரந்த அளவிலான ஆதரவு கிடைக்கிறது.
மக்களின் வருவாய் ஏற்றத்தாழ்வைக் குறைப்பதில் அரசாங்கம் முன்னேற்றத்தைச் சாதித்து இருக்கிறது.
அதையடுத்து, சமூக முன்னேற்றத்திற்கு மேலும் ஊக்கமூட்ட அரசாங்கம் விரும்புகிறது,
குறைந்த வருமானக் குடும்பங்கள் சுய சார்புடன், சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற ஊக்கத்துடன் இருக்க வேண்டும்.
அத்தகைய குடும்பங்களுக்கு அரசாங்கம் கொடுக்கும் ஆதரவு அந்த ஊக்கத்தைக் கெடுத்துவிடக் கூடாது என்று முன்னேறும் சிங்கப்பூர் கருத்து திரட்டும் இயக்கத்தில் கலந்துகொண்ட மக்கள் வலியுறுத்திக் கூறியதை அமைச்சர் மசகோஸ் சுட்டிக்காட்டினார்.
தாங்கள் கண்ணியத்துடன் வாழ வேண்டியது முக்கியமானது என்று அரசு ஆதரவு மூலம் நன்மை அடையும் குடும்பங்களும் தெரிவித்து இருந்தன.
குறைந்த வருமானக் குடும்பங்கள் தங்கள் இலக்குகளை நிறைவேற்ற உதவும் வகையில் காம்லிங்க் அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் குடும்ப வழகாட்டிகளாக ஆவார்கள்.
அத்தகைய குடும்ப வழிகாட்டிகள் ஒவ்வொரு குடும்பத்தோடும் அணுக்கமாகச் செயல்படுவார்கள்
வசதி குறைந்தவர்கள், எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு அரசாங்கம் அதிக உதவிகளைச் செய்து வருகிறது என்றும் தொடர்ந்து அது உதவும் என்றும் அறிக்கை உறுதி கூறியது.
அதேவேைளயில், அரசாங்கத்தையே பெரிதும் சார்ந்து இருக்கக்கூடிய எண்ணத்தையோ அரசு உதவி பெற தங்களுக்கு உரிமை உண்டு என்ற எண்ணத்தையோ அத்தகைய உதவிகள் ஏற்படுத்திவிடக்கூடாது என்றும் அறிக்கை குறிப்பிட்டது.