சிங்கப்பூரர் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய உறுதி தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘முன்னேறும் சிங்கப்பூர்’ திட்டத்தில் கூடுதல் சமூக ஆதரவு திட்டங்கள் முன்வைக்கப்பட்டு உள்ளன. அதோடு காலத்திற்கு ஏற்ப மாற வேண்டிய அவசியத்தையும் அது வலியுறுத்துகிறது.
காலம் மாறிக் கொண்டே இருக்கும் சூழ்நிலையில் நான்காம் தலைமுறை தலைமைத்துவம், செழிப்பான சிங்கப்பூரை நோக்கிய பாதையில் ஒர் வரைவு திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
வசதி குறைந்தவர்கள்,பணியிடைக்கால ஊழியர்கள், மூத்தோர் போன்ற பிரிவினருக்கு அதிக உதவி வழங்குவது அவற்றில் அடங்கும். கூடுதல் நிதியுதவி, மேம்பட்ட உள்கட்டமைப்பு உள்ளிட்ட வழிகளில் உதவிகள் இருக்கும்.
அது மட்டுமல்லாமல் சிங்கப்பூரர்களின் ஒவ்வொரு வாழ்க்கை கட்டத்திலும் அதாவது, கல்வி, ஓய்வு, சுகாதாரப் பராமரிப்பு, வீடு போன்றவற்றில் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதில் அதிக உத்தரவாதம் இருக்கும்.
வெள்ளிக்கிழமை அன்று 180 பக்க ‘முன்னேறும் சிங்கப்பூர்’ அறிக்கை வெளியிடப்பட்டது.
இலக்குகளை அடைய சிங்கப்பூரர்களுக்கு தேவையான மனநிலை மாற்றத்தையும் அறிக்கை சுட்டிக்காட்டியது.
வெற்றி என்ற பாதையில் ஒருவருக்கு ஒருவர் வலுவாக கூட்டாக பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று அது குறிப்பிட்டது.
துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தலைமையில் அனைவரையும் உள்ளடக்கும் தேசிய இயக்கமாக ‘முன்னேறும் சிங்கப்பூர்’ 2022 ஜூன் மாதம் தொடங்கப்பட்டது.
ஏறக்குறைய 200,000 சிங்கப்பூரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
“ஒவ்வொரு சிங்கப்பூரரின் ஆசைகளை பூர்த்தி செய்ய அரசாங்கம் அதற்கான அனைத்து வாய்ப்புகளையும் உத்தரவாதத்தையும் வழங்கும்,” என்று ‘முன்னேறும் சிங்கப்பூர்’ செயலகம் வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்தது.
இதற்கிடையே தனிப்பட்டவர்கள், வர்த்தகம் மற்றும் சமூகத்தினர் தங்களுடைய வழிகளில் பங்களிக்க வேண்டும் என்று செயலகம் கேட்டுக் கொண்டது.