வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான லிம் தியென், அனுமதியின்றி வழக்கறிஞராகச் செயல்பட்டது தொடர்பில் ஆகஸ்ட் 29ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தான் எதிர்கொள்ள வேண்டிய விசாரணையைத் தள்ளிப்போடக் கோரியுள்ளார்.
தனது வழக்கறிஞருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் ஆவணங்களைக் கையாள்வதில் ஏற்பட்ட தாமதம், அதிபர் தேர்தல் பிரசாரத்தில் தாம் ஈடுபட்டிருப்பது ஆகிய காரணங்களை அவர் சுட்டினார்.
58 வயதாகும் லிம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பில் செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெறவிருந்தது.
2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கும் ஜூன் மாதத்திற்கும் இடையில் லிம்மிற்கு வழக்கறிஞராகப் பணிபுரிவதற்கான சான்றிதழ் இல்லாதபோதும் அவர் வழக்கறிஞராகச் செயல்பட்டது தொடர்பில் அந்த மூன்று குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.
செவ்வாய்க்கிழமை, லிம் தனக்காகத் தானே ஒரு மனுவைச் சமர்பிப்பார் என்று லிம்மின் வழக்கறிஞர் சங்கர் கைலாச தேவர் சாமிநாதன் நீதிபதியிடம் கூறினார்.
இந்த வழக்கில் வழக்கறிஞர் சங்கர் இனி தன்னைப் பிரதிநிதிக்க மாட்டார் என்று லிம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.