மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னத்திற்கு நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை புகழஞ்சலி செலுத்தப்பட்டது.
20 ஆண்டுகளுக்கு மேலாக அவர் நாட்டிற்கு ஆற்றிய சேவை தொடர்பில் நாடாளுமன்றம் திரு தர்மனுக்கு நன்றி செலுத்தியது.
தாம் அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக ஜூன் 8ஆம் தேதி திரு தர்மன் அறிவித்தார்.
வெள்ளிக்கிழமை அவர் மக்கள் செயல் கட்சியிலிருந்து விலகுவார் என்று தெரிவிக்கப்பட்டது. மூத்த அமைச்சர், சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் ஆகிய பொறுப்புகளில் இருந்தும் அவர் விலகிக்கொள்வார்.
திரு தர்மன் 2001ஆம் ஆண்டு அரசியலில் இணைந்தது முதல் நாட்டிற்கு ஆற்றிய சேவைகளை மக்கள் செயல் கட்சியின் நாடாளுமன்ற அவைத் தலைவர் இந்திராணி ராஜா பட்டியலிட்டார். கல்வி அமைச்சர், நிதியமைச்சர், துணைப் பிரதமர், சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர், மூத்த அமைச்சர் என்ற நிலைகளில் திரு தர்மன் பங்களித்ததை குமாரி இந்திராணி ராஜா எடுத்துரைத்தார்.
பிரதமர் அலுவலக அமைச்சரான குமாரி இந்திராணி, “அமைச்சர் என்ற முறையில் திரு தர்மனின் ஆளுமை மிக்க இருப்பையும் அவரது அறிவார்ந்த உரைகளையும் நாடாளுமன்றத்தில் இனி கேட்க இயலாது; மிகவும் சிக்கலான பொருளியல் கொள்கைகளையும்கூட எளிமையாக உணர வைக்கும் திறன் திரு தர்மனுக்குக் கிட்டிய வரம் என்றே குறிப்பிடலாம்,” என்று கூறினார்.
திரு தர்மனின் நகைச்சுவைப் பேச்சையும் குறிப்பிட்ட அவர், ஒரு நண்பர், சக நாடாளுமன்ற உறுப்பினரைப் பிரிவது வருத்தமளிப்பதாகக் கூறினார்.
சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் தலைவர், அரசாங்க முதலீட்டு நிறுவனமான ஜிஐசியின் துணைத் தலைவர், பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் அனைத்துலக ஆலோசனை மன்றத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளில் திரு தர்மன் திறம்படச் செயலாற்றியதை அமைச்சர் இந்திராணி குறிப்பிட்டார்.
“நாடாளுமன்றத்தில் சிங்கப்பூரின் வரவு, செலவுத் திட்டங்களை வெளியிட்டு திரு தர்மன் ஆற்றிய உரைகள் நாட்டின் பொருளியல் வளர்ச்சிக்கு உதவின. 2007 முதல் 2009ஆம் ஆண்டு வரை உலகப் பொருளியல் நெருக்கடி நிலவிய வேளையில் சிங்கப்பூரைச் சிறப்பாக வழிநடத்தின,” என்று அவர் நினைவுகூர்ந்தார்.
திரு தர்மன் பல முக்கியமான கொள்கை மாற்றங்களுக்கு வித்திட்டவர். என்ஐஆர் எனப்படும் நிகர முதலீட்டு லாபக் கட்டமைப்பும் அவற்றில் அடங்கும். அரசாங்கச் செலவினத்துக்குக் கூடுதல் வளங்களை அது வழங்கியது. நடுத்தர வருவாய் ஈட்டும் சிங்கப்பூர்க் குடும்பங்களுக்கு பொருள், சேவை வரி பற்றுச்சீட்டுத் திட்டம் மூலம் கைகொடுக்கவும் அது உதவியது.
கல்வி அமைச்சராக இருந்தபோது பள்ளிகளில் நேரடி மாணவர் சேர்க்கைத் திட்டத்தை திரு தர்மன் அறிமுகப்படுத்தினார். தொடக்கப் பள்ளிகளில் தரம் பிரிக்கும் நடைமுறையை நீக்கினார்.
பொருளியல், மனிதவளம் ஆகிய துறைகளில் பொறுப்பில் இருந்தபோது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை திரு தர்மன் வலியுறுத்தினார். சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் நல்ல வேலைகளையும் ஊதியத்தையும் வழங்க அது வழிவகுத்தது.
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டத்தை வழிநடத்திய அவர், குறைந்த வருமான ஊழியர்களுக்குப் போதிய ஓய்வுக்காலச் சேமிப்பை உறுதிசெய்யும் படிப்படியான சம்பள முறை போன்ற திட்டங்களில் கவனம் செலுத்தினார் என்று அமைச்சர் இந்திராணி குறிப்பிட்டார்.
மேலும் பதவி ஓய்வு பெறவிருக்கும் நியமன நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்பது பேருக்கும் அமைச்சர் இந்திராணி நாடாளுமன்றத்தில் நன்றி தெரிவித்துக்கொண்டார்.