'ஹைஃபிளக்ஸ்’ நிறுவனத்தைத் தோற்றுவித்தவரும் அதன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஒலிவியா லம் உய் லின் உள்ளிட்ட ஐவர்மீது பங்குச் சந்தை மோசடி தொடர்பிலான ‘பங்குச் சந்தை மற்றும் எதிர்கால வர்த்தக ஒப்பந்தங்கள்’ சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி சோ வீ பெங், முன்னாள் இயக்குநர்கள் நால்வர் ஆகியோர் குற்றஞ்சாட்டப்ட்ட மற்றவர்கள் ஆவர்.
தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனமான ‘ஹைஃபிளக்ஸ்’ மூடப்பட்டு 17 மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிறுவனம் மூடப்பட்டதால் ஏறக்குறைய 34,000 முதலீட்டாளர்களுக்கு மொத்தம் $900 மில்லியன் நட்டம் ஏற்பட்டது.
துவாஸ் ஸ்பிரிங்’ ஒருங்கிணைந்த தண்ணீர், எரிசக்தித் திட்டம் தொடர்பான முக்கியத் தகவல்களை வெளியிட மறுத்ததன் தொடர்பில் இந்த உயரதிகாரிகள் ஆறு பேர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
61 வயதாகும் திருவாட்டி லம், 100,000 வெள்ளிப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சோ வீ பெங் 160,000 வெள்ளிப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட மற்ற நால்வர் 66 வயது டியோ கியாங் கோக், 63 வயது கிறிஸ்டோஃபர் முருகேசு, 66 வயது கே சீ சியோங், 65 வயது ராஜசேகர் குப்புசாமி மிட்டா ஆகியோர். இந்நால்வர்மீதும் ஆளுக்கு இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.