தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனத்தின் நிர்வாகம் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு
தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனமான ‘ஹைஃபிளக்ஸ்’ நீதித்துறை நிர்வாகத்தின் கீழ் வந்துள்ளது.
இதற்கான உத்தரவை நேற்று உயர்நீதிமன்றம் பிறப்பித்தது.
இரண்டு ஆண்டுகளுக்கும் அதிக காலமாக நீடித்து வரும் கடன் அடைப்பு முயற்சிகளைத் தொடர்ந்து உடனடியாக இந்த ஏற்பாடு நடப்புக்கு வருகிறது.
இதனையடுத்து, அந்த நிறுவனத்தை நிறுவிய ஒலிவியா லும், நிர்வாகச் சபை உறுப்பினர்கள் எல்லாரும் இனிமேல் நிறுவனத்தைக் கட்டுப்படுத்த முடியாது.
நீதித்துறை நிர்வாகியாக போரோலி வால்ஷ் நிறுவனம் ஹைஃபிளக்ஸின் செயல்பாடுகளைத் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டுள்ளது.
போரோலி வால்ஷ் நிறுவனத்தின் பிரமுகர்கள் ஹைஃபிளக்ஸ் கட்டடத்திற்குச் சென்று அதன் பூட்டுகளை மாற்றி கணினி இயந்திரங்களைச் சரிபார்த்து எல்லாவற்றையும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளத் தொடங்கிவிட்டதாக தகவல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
ஹைஃபிளக்ஸ் நிறுவனத்தை வாங்கி தனியார்மயமாக்கி அதில் $208 மில்லியன் பணம் போடுவதற்கான திட்டத்தை அமெரிக்க நிதி நிர்வாக நிறுவனமான ‘ஸ்ட்ரடிஜிக் குரோத் இன்வெஸ்ட்மெண்ட்ஸ்’ முன்னுரைத்து இருக்கிறது.
இதைக் கருத்தில் கொண்டு மேலும் கொஞ்ச காலம் அவகாசம் வழங்கலாம் என்று ஹைஃபிளக்ஸ் வழக்கறிஞர்களும் கடன்கொடுத்தவர்களில் சிலரும் கூறி வருகிறார்கள். என்றாலும் உயர்நீதிமன்றம் நிர்வாகப் பொறுப்பை நீதித்துறை எடுக்கும்படி உத்தரவிட்டு உள்ளது.
கடன்களை அடைப்பதற்கான தற்காலிக நிறுத்திவைப்புக் காலம் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 12 தடவை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது என்றாலும் ஹைஃபிளக்ஸ் நிர்வாகச் சபை இதன்தொடர்பில் எந்தவொரு உடன்பாட்டையும் காணவில்லை.
இந்த நிறுவனத்தின் எஞ்சிய மதிப்பும் ஏற்கெனவே குறைந்துவிட்டது என்று கடன்கொடுத்த வர்களில் சிலர் அஞ்சுகிறார்கள்.
இவை எல்லாம் ஒருபுறம் இருக்க, ஹைஃபிளக்ஸ் நிறுவனமும் அதனுடைய இப்போதைய மற்றும் முன்னாள் இயக்குநர்களும் இப்போது விசாரணையின்கீழ் இருக்கிறார்கள்.
பொய்யான, தவறான வழிகாட்டும் கணக்கு அறிக்கைகள், வெளியீட்டு விதிமுறைகளை மீறியது ஆகியவை தொடர்பில் அவர்கள் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.