சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்தின் பெயரில் சிங்கப்பூரர்களுக்கு மீண்டும் மோசடி மின்னஞ்சல்கள் வரத் தொடங்கியுள்ளன.
இப்போது தலைதூக்கியுள்ள மோசடியில், வரியைத் திரும்பப் பெறலாம் என்று உறுதி அளிக்கப்படுகிறது. இது 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடந்த மோசடி போன்றது.
மின்னஞ்சலில் தரப்பட்டுள்ள இணைப்பைச் சொடுக்கியதும் அது போலி இணையத்தளத்திற்கு இட்டுச்செல்லும்.
அதன் பின்னர், சிங்பாஸ் விவரங்கள், கடன் அட்டை விவரங்கள் போன்ற தனிநபர் தகவல்களை வழங்கக் கோரப்படும்.
ஆணையம் ஜனவரி 30ஆம் தேதியன்று வெளியிட்ட அறிக்கையில், இவை யாவும் மீண்டும் நிகழத் தொடங்கியுள்ள ‘ஃபிஷிங்’ மோசடியின் ஒரு பகுதி என்று குறிப்பிடப்பட்டது.
அதிகாரிகள் போலவும் நம்பகமான அமைப்புகள் போலவும் நடிக்கும் மோசடிக்காரர்களிடமிருந்து வரக்கூடிய மின்னஞ்சல்கள், குறுந்தகவல்கள், தொலைபேசி அழைப்புகள், விளம்பரங்கள் ஆகியவை இந்த ‘ஃபிஷிங்’ மோசடிகளில் அடங்கும்.
கடன் அட்டை அல்லது வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்றுக்கொண்ட பின்னர், அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளை மோசடிக்காரர்கள் செய்திடுவர்.