சிங்கப்பூர் நாணய வாரியம் அனுப்பியதாக மோசடிக்காரர்கள் வாடகைதாரர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியதாக சிங்கப்பூர் உள் நாட்டு வருவாய் ஆணையம் எச்சரித்துள்ளது.
அந்த மின்னஞ்சலில் வாடகைதாரர்கள் கூடுதலாக முத்திரை வரி செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முத்திரை வரி செலுத்துவதற்கான போலிச் சான்றிதழ் ஒன்றும் அதில் இணைக்கப்பட்டிருக்கும்.
ஆணையத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணம் நிலுவையில் உள்ளதாகவும் அதற்கு ஒப்புதல் தேவை என்றும் அந்த மின்னஞ்சலில் இடம்பெற்றிருக்கும்.
வாடகைதாரர்கள் $4,536 முத்திரை வரி செலுத்த வேண்டும். வாடகைக்காலம் காலாவதியாகும்போது அந்த வரிப்பணம் திருப்பித் தரப்படும் என்று போலிச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
வரிச் சான்றிதழ் உண்மையானதா என்பதைச் சரிபார்க்க வாடகைதாரர்களுக்கு ஓர் இணையத்தள முகவரியை மோசடிகாரர்கள் வழங்குவர். ஆனால் அந்த இணையத்தளம் புதன்கிழமையிலிருந்து செயல்படவில்லை.
வாடகை ஒப்பந்தப் பத்திரத்திற்கு கூடுதல் முத்திரை வரி செலுத்தத் தேவையில்லை என்று ஆணையம் தெரிவித்தது.
அந்த மோசடி மின்னஞ்சலைப் புறக்கணிக்கும்படி கேட்டுக்கொண்ட அது, “பொதுமக்கள் தனிப்பட்ட விவரங்களையோ கடன் அட்டை, வங்கிக் கணக்கு போன்ற விவரங்களையோ வழங்கவேண்டாம். அந்த மின்னஞ்சலில் கொடுக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றிப் பணம் செலுத்த வேண்டாம்,” என்று அறிவுறுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையிடம் புகார் அளிக்கும்படி அது கேட்டுக்கொண்டது.