சிங்கப்பூரில் ஆகப் பெரிய கள்ளப் பண வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 10 வெளிநாட்டவர்களில் ஒருவரான சூ வென்சியாங் மீது ஜனவரி 29ஆம் தேதி ஏழு புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
கம்போடியக் கடப்பிதழை வைத்திருக்கும் சீனாவைச் சேர்ந்த சூ, 31, இப்போது மொத்தம் 9 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
அவர் குற்றச்செயல்களிலிருந்து பெற்ற கிட்டத்தட்ட $476,000ஐ கொண்டு, பைகள், நகைகள், மதுபானம் ஆகியவற்றை வாங்கியதாகவும் கூட்டுரிமை வீடு ஒன்றுக்கும் தரை வீடு ஒன்றுக்கும் வாடகை கட்டியதாகவும் ஆறு புதிய குற்றச்சாட்டுகள் கூறுகின்றன.
பிலிப்பீன்சைச் சேர்ந்த சட்டவிரோத இணைய சூதாட்டச் சேவையை சீன நாட்டினருக்காக நடத்தி, அதிலிருந்து அவர் கள்ளப் பணத்தைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
அதோடு, சீனாவிலிருந்து போலித் திருமணச் சான்றிதழைக் கொண்டிருப்பதாக அவர்மீது ஏழாவது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவர் 2018ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி சு யன்பிங் என்பவருடன் திருமணத்தைப் பதிவுசெய்துகொண்டதாக அந்தத் திருமணச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டது. இருப்பினும் அத்தகைய பதிவு எதுவும் செய்யப்படவில்லை.
அவர், சார்ந்திருப்போர் அட்டை (டிபெண்டன்ட் பாஸ்) விண்ணப்பத்திற்காக அந்தச் சான்றிதழை மனிதவள அமைச்சிடம் சமர்ப்பிக்க திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
சென்ற ஆண்டு கள்ளப் பணத்தின் தொடர்பில் நடந்த விசாரணையின்போது ஆகஸ்ட் 15ஆம் தேதி கைதான 10 வெளிநாட்டவரில் சூவும் ஒருவர். அந்த வழக்கில், $3 பில்லியன் வெள்ளி பெறுமான சொத்துகள் கைப்பற்றப்பட்டன.
சூ, புக்கிட் திமாவில் உள்ள உயர்தர சொகுசு பங்களா வீடு ஒன்றில் பிடிபட்டார்.