சிறுநீரகக் கற்களை அகற்ற உரிய சிகிச்சை பெறாமல் போனால் பின் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
சிறுநீர்ப் பாதை, சிறுநீரகங்கள், சிறுநீர்க் குழாய்கள், சிறுநீர்ப்பை போன்ற இடங்களில் சிறுநீரக கற்கள் தோன்றலாம்.
உணவு முறை, உடல் எடை போன்ற காரணிகளால் சிறுநீரகக் கற்கள் உருவாகும். காய்ச்சலுடன் குமட்டல் உணர்வு மற்றும் சிறுநீரில் ரத்தம் தென்பட்டால் ஒருவர் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும்.
சிறுநீரகக் கற்களால் பாதிப்படைந்துள்ள நோயாளிகள் தங்கள் உணவு முறையில் சிறிய மாற்றங்கள் செய்து, நோயின் தீவிரத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
தண்ணீர்
சிறுநீரகக் கற்கள் இருந்தால் உடலில் நீரேற்றம் இருந்துகொண்டே இருக்க வேண்டும்.
எலுமிச்சை
எலுமிச்சம்பழத்தில் அதிகளவில் சிட்ரேட் சத்து உள்ளது. அதிலுள்ள சிட்ரிக் அமிலம் சிறுநீரகக் கற்களைக் கரைக்க உதவும். எலுமிச்சம்பழச் சாற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நோயாளிகள் பருகலாம்.
ஆரஞ்சு
எலுமிச்சைபோல ஆரஞ்சுப் பழத்திலும் சிட்ரிக் அமிலம் அதிகளவில் உள்ளது. அது, சிறுநீரகக் கற்களைக் கரைக்க உதவும்.
பால்
பாலில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. கால்சியம் பற்றாக்குறை உள்ளவர்கள் அதற்கான ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொள்வதைவிட பால் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். மேலும், கால்சியம் ஊட்டச்சத்து மாத்திரைகளை அதிகம் சாப்பிடுவதால் சிறுநீரகக் கற்கள் உருவாகும் அபாயமும் உண்டு
பருப்பு, கொட்டை வகைகள்
பருப்பு மற்றும் கொட்டை வகைகளில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. நோயாளிகள் இயற்கை முறையில் கால்சியம் சத்தைப் பெறுவது நல்லது.
புரொக்கோலி
சிறுநீரகக் கற்களில் பெரும்பாலும் அதிகளவில் ஆக்சலேட் இருக்கின்றது. இதனால் ஆக்சலேட் அதிகம் நிறைந்துள்ள உணவு வகைகளை நோயாளிகள் தவிர்க்க வேண்டும். புரொக்கோலியில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. அது ஆக்சலேட்டைக் கரைக்கும் ஆற்றல் கொண்டது.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
உப்பு அதிகமுள்ள உணவு
உப்பு அதிகம் உள்ள உணவு வகைகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கற்கள் உருவாகுவதற்கான அபாயம் அதிகம். பதப்படுத்தப்பட்ட உணவு, விரைவுணவு ஆகியவற்றில் உப்பு அதிகமாக இருக்கிறது.
வைட்டமின் சி ஊட்டச்சத்து மாத்திரைகள்
வைட்டமின் சி அதிகமாக உட்கொண்டு வந்தால் அது நம் உடலில் சென்றடையும்போது விரைவில் ஆக்சலேட்டாக மாறிவிடும். ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிடுவதைவிட இயற்கையான முறையில் வைட்டமின் சி நிறைந்துள்ள உணவு வகைகளைச் சாப்பிடலாம்.
குறிப்பிட்ட சில பழங்கள்
பேரிச்சம்பழம், ராஸ்பெரி போன்ற பழங்களில் ஆக்சலேட் நிறைந்துள்ளது. வாழைப்பழம், ஆப்பிள்கள் போன்ற இதர தெரிவுகளை நோயாளிகள் நாடலாம்.
காஃபின்
காஃபின் அடங்கியுள்ள பானங்களை அதிகம் அருந்தும்போது ஒருவர் அதிகளவில் சிறுநீர் கழிக்க நேரிடும். இதனால் உடலில் விரைவாக நீரிழப்பு ஏற்படும். உடலில் தண்ணீர் அளவு குறைவாக இருந்தால் சிறுநீர்க் கற்கள் எளிதில் உருவாகக்கூடும்.
இறைச்சிப் புரதச்சத்து
இறைச்சிப் புரதம் அதிகம் உட்கொள்வதால் உடலில் யூரிக் அமிலம் உருவாகும். ஆக்சலேட் தவிர, யூரிக் அமிலம் சிறுநீரகக் கற்களை உருவாக்கும் மற்றொரு பொருளாகும். புரதச்சத்தை அசைவ உணவுகளில் இருந்து மட்டுமே பெற்றால் சிறுநீரகக் கற்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம். அதற்கு பதிலாக சைவ உணவை நாடலாம்.