புனித ரமலான் மாதத்தின் முதல் தராவீஹ் தொழுகைக்காக தீவெங்கிலுமுள்ள பள்ளிவாசல்களில் முஸ்லிம் அன்பர்கள் திரண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.
ரமலான் மாதத்தில் இடம்பெறும் இரவுநேர தராவீஹ் தொழுகைக்காக, டன்லப் ஸ்திரீட்டிலுள்ள அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் தொழுகையாளர்கள் திரண்டு வந்திருந்தனர். திங்கட்கிழமை இரவு 9 மணிக்கு தொடங்கிய முதல் தராவீஹ் தொழுகையில் ஏறக்குறைய 1,200 பேர் ஈடுபட்டனர்.
சுமார் 160 ஆண்டு பழமை வாய்ந்த அப்துல் கஃபூர் பள்ளிவாசல், பலரின் இனிய தருணங்களுக்கும் நினைவுகளுக்கும் கருவூலமாய் திகழ்கிறது.
பள்ளிவாசலின் அலுவலகக் கட்டடம், முன்னைய காலத்தில் தாமும் தம் நண்பர்களும் வாழ்ந்த கம்பத்துக் குடியிருப்பாக இருந்ததாக நகைக்கடைக்காரர் முஹம்மது குவாஜா நிஜாம் மரைக்கார், 50, நினைவுகூர்ந்தார்.
பள்ளிவாசலுக்கு வரும்போதெல்லாம் அவருக்கு இளமைக்கால நினைவு, பசுமைத் தென்றலாய் வீசுகிறது.
பள்ளிவாசலில் எங்கு திரும்பினாலும் அவர் உறவினர்களையும் நண்பர்களையும் காண்கிறார். அறிமுகமற்ற புதியவர்களையும் கண்டு இன்முகத்துடன் பேசுகிறார். காலப்போக்கில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டபோதும் வீட்டில் இருப்பதுபோன்ற உணர்வு அவருக்கு ஏற்படுகிறது.
சிறு வயதில் இஸ்லாமிய கல்வியை அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் தாம் பயின்றதாகக் குறிப்பிட்ட பல்கலைக்கழக மாணவர் அஹமது இப்ராஹிம், 24, நோன்பு காலத்தில் குடும்பத்தினரையும் உறவினர்களையும் இங்கு கண்டு மகிழ்வதாகக் கூறினார்.
வழிபாட்டுக்கு சிறப்பிடம் தருவதில் சிங்கப்பூர் தனித்துவம் பெறுவதை உணர்வதாக இங்கு தொழ வந்திருந்த கல்வி ஆலோசகரும் பிரியாணிக் கடைக்காரருமான காதர் மொஹைதீன் தெரிவித்தார்.
“இங்கு பலவிதமான மக்கள் தோழமையில் இணைந்து கொண்டாடுவதைக் காணும்போது மனம் குளிர்கிறது,” என்றார்.
இந்திய முஸ்லிம்கள் பலர் செல்லும் பென்கூலன் பள்ளிவாசலில் ரமலான் மாதத்தின் முதல் நாள் தராவீஹ் தொழுகை சிறப்பாக நடைபெற்றதாக அதன் தலைவர் ஹாஜி.மு.யூ. முஹம்மது ரஃபீக் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
தொழுகையில் சுமார் 300 ஆண்களும் 150 பெண்களும் பங்கேற்றதாக அவர் கூறினார்.
இரண்டாம் தராவீஹ் தொழுகைக்கு வரவேற்பு
அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் இரண்டாவது தராவீஹ் தொழுகை இரவு 11 மணிக்கு நடத்தப்படுகிறது. வழக்கமாக இரவு 9 மணிக்கு தொடங்கும் முதல் தொழுகையில் கலந்துகொள்ள இயலாதோருக்கு பள்ளிவாசல் இம்முறை இரண்டாவது தொழுகைக்கும் ஏற்பாடு செய்துள்ளது.
இரண்டாவது தொழுகைக்கு சுமார் 100 அன்பர்கள் கலந்துகொண்டு 20 ரகாஅத் தொழுகையில் ஈடுபட்டதாக பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவித்தது.
கடைக்காரர்கள், சுழற்சி முறையில் வேலை செய்பவர்கள் போன்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க இரண்டாவது தராவீஹ் தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிவாசலின் தலைமை இமாம் அஜீஜுல்லாஹ் ஹஸனி கூறினார்.
நோன்பு துறப்பிற்குப் பிறகான தொழுகை, நோன்பை முழுமையாக்குவதால் அதனைப் பள்ளிவசலில் தொழும் வாய்ப்பைப் பெறும்போது முஸ்லிம்கள் மனநிறைவு பெறுவதாக பிஸ்மி இஸ்லாமிய வானொலியில் பகுதிநேர படைப்பாளராகப் பணியாற்றும் திரு காதர் கூறினார்.
“எனவே, இரண்டாவது தொழுகைக்குப் பள்ளிவாசலின் ஏற்பாடு பாராட்டுக்குரியது,” என்று அவர் கூறினார்.
கடை அடைப்பதற்கு இரவு 10 மணி ஆவதாகக் கூறும் முகம்மது இஃபால் முகம்மது இஸ்மைல், 74, இந்த ஏற்பாட்டினால் தொழ முடிவதை எண்ணி மகிழ்கிறார்.
தற்போது இந்த இரண்டாவது தொழுகை வேறெங்கும் நடத்தப்படாததால் இது மிகப் பெரிய வசதி என்று லிட்டில் இந்தியாவில் மினிமார்ட் வைத்திருக்கும் ஹாஜி முஹம்மது அலி, 46, தெரிவித்தார்.
“பள்ளிவாசலில் தொழும் வாய்ப்பைப் பெறும் பேறாக கருதுகிறோம். இனி வரும் ஏற்பாடுகள் இங்கு சிறப்பாக நடைபெறும் என நம்புகிறோம்,” என்று நாகப்பட்டினத்தைப் பூர்வீகமாகக் கொண்டுள்ள திரு அலி கூறினார்.