நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றம் (என்டியூ டிஎல்எஸ்), ஜனவரி 20ஆம் தேதி காலை 10 முதல் மாலை 5.30 மணி வரை ‘என்டியூ’வில் ‘யாழ் 2024’ நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியது.
அதில் இடம்பெற்ற இரு இசைப் பயிலரங்குகள், மூன்று நடனப் பயிலரங்குகளில் பல்கலைக்கழக, பலதுறைத் தொழிற்கல்லூரி, ‘ஐடிஇ’, உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றின் மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் எனக் கிட்டதட்ட 70 இளையர்கள் கலந்துகொண்டனர்.
பயிற்றுவிப்பாளர்களும் இளையர்களே என்பது மற்றொரு சிறப்பு.
இந்தியப் பாரம்பரிய இசைப் பயிலரங்கை ‘என்டியூ டிஎல்எஸ்’ மாணவர்கள் ஸ்ரீராம் ரங்கா, ஹரிஷங்கர் இருவரும் வழிநடத்தினர். ராகங்கள், தாளங்கள் என இசையின் அடிப்படைக் கூறுகளைச் சொல்லிக் கொடுத்து, ‘டாக்டர்’ திரைப்படத்தின் ‘சோல் ஆஃப் டாக்டர்’ பாடலைப் பாடவும் இவர்கள் பயிற்சி வழங்கினர்.
“வந்திருந்தோரின் பலதரப்பட்ட கலாசார, இசைப் பின்னணி பயிலரங்கிற்குத் திட்டமிடுவதற்கு மேலும் சுவை கூட்டியது,” என்றார் ஸ்ரீராம் ரங்கா.
மேற்கத்திய இசைப் பயிலரங்கை ‘வசந்தம் ஸ்டார் 2023’ பிரபலம் மழைமேகன் மற்றும் ஞானதாஸ் ஹம்சவதணன் நடத்தினர்.
மேற்கத்திய இசையின் வரலாறு, கருவிகள், இசையமைப்பாளர்களின் சிந்தனைகள், நுணுக்கங்கள் ஆகியவற்றை அவர்கள் கற்பித்தனர்.
“ஒரு திருப்திகரமான அனுபவமாக இருந்தது. நான் நேசிக்கும் இசையை இளையர்களுக்குக் கற்றுக் கொடுத்ததில் எனக்குப் பெருமகிழ்ச்சி. அவர்களின் ஆர்வம் எங்களை உற்சாகப்படுத்தியது,” என்றார் ஹம்சவதணன்.
நடனப் பயிலரங்குகள் சமகால நடனம் (கன்டெம்பரரி), ‘ஹிப்ஹாப்’, குத்து என மூவகைப்பட்டன.
பரதநாட்டியம், சமகால நடனம் என இருவகை நடனங்களை இணைத்த ‘பூகிபேஸ்’ நடனப் பயிற்றுவிப்பாளர் ஸ்ருதி நாயர், “வந்திருந்த இளையர்கள் இந்த நடன வடிவத்தில் முழு மனத்தோடு ஈடுபடுவதைக் கண்கூடாகப் பார்க்கையில் ஓர் ஆசிரியராக மனநிறைவடைந்தேன்,” என்றார்.
‘பூகிபேஸ்’ ஹிப்ஹாப் நடனப் பயிற்றுவிப்பாளர்கள் லோகேஸ்வரன் மற்றும் சிவா, “இதுவரை பார்த்திராத பல புதிய திறனாளர்களைக் காணும் வாய்ப்பாக இப்பயிலரங்கு அமைந்தது,” என்று கூறினர்.
‘ராயலூஷன்’ நடனக்குழுவின் குத்து நடனப் பயிற்றுவிப்பாளர் சாரா தர்மராசு, “நம் தமிழ்ப் பண்பாட்டில் வேரூன்றியுள்ளது குத்து நடனம். அதைக் கற்றுக்கொள்ள இளையர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன்,” என்றார்.
“யாழ் 2024ன் நோக்கத்தை விவரித்ததும் பயிற்றுவிப்பாளர்கள் அனைவரும் இதை நல்ல முயற்சியாகக் கருதி உடனடியாக இதில் ஈடுபட ஒப்புக்கொண்டனர்,” என்றார் ‘என்டியூ டிஎல்எஸ்’ தலைவர் ம.சந்துருவேல்.
“புதிதாகத் தொடங்குபவர்களுக்கு ஏதுவாக இருந்ததாகவும் இதன் பின்பு தங்கள் கலையார்வத்தை மேலும் வளர்த்துக்கொள்ள விரும்புவதாகவும் பங்கேற்ற பலரும் கூறினர்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
16 உறுப்பினர்கள் கொண்ட குழு, 2023 அக்டோபரிலேயே இந்நிகழ்ச்சிக்குத் திட்டமிடத் தொடங்கியது. நவம்பரில் தேர்வுகளை முடித்ததும் டிசம்பர், ஜனவரியில் மீண்டும் முழு மூச்சாக அதில் முனைப்புடன் ஈடுபட்டனர் ஏற்பாட்டுக் குழுவினர்.
‘டெலிகிராம்’, ‘இன்ஸ்டகிராம்’ ஆகியவற்றின் மூலம் பல இளையர்களைச் சென்றடைய முடிந்தது.
“வரும் ஆண்டுகளிலும் யாழ் நிகழ்ச்சியை நடத்தினால் எங்கள் அடையாள நிகழ்ச்சிகளில் ஒன்றாக அது மாறிவிடும்,” என்று நம்பிக்கையோடு கூறினார் சந்துருவேல்.