இளம் வயதிலிருந்தே சுயதொழில் மீதும் தொழில்நுட்பம் மீதும் தீவிர ஈடுபாடு கொண்ட 47 வயது கிருஷ்ணமணி கண்ணன், அன்று கண்ட கனவு தற்போது நனவாகி வருகிறது.
உள்ளூரில் உணவு விநியோகம் செய்யும் ‘டெலிவர்.எஸ்ஜி’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இவர் இருக்கிறார்.
தமிழகத்தில் பொறியியல் துறையில் பட்டப்படிப்பை முடித்த இவர், பணி நிமித்தமாக 2006ஆம் ஆண்டு சிங்கப்பூர் வந்தார். மென்பொருள் பொறியாளரான இவர், சவால் நிறைந்த கொவிட்-19 நோய்த்தொற்றுக் காலத்தைத் தனது சுயதொழில் ஆசையை நிறைவேற்றப் பயன்படுத்திக்கொண்டார்.
“கொவிட்-19 காலகட்டத்தில் இணையம் வழி பொருள்களை வாங்குவதும் விநியோகிப்பதும் பொதுமக்களிடையே வழக்கமானதை உணர்ந்தேன். இதை நான் தொழில் தொடங்குவதற்கான மாபெரும் வாய்ப்பாகப் பார்த்தேன்,” என்று கூறினார் கிருஷ்ணமணி.
தகவல் தொழில்நுட்பத் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த அனுபவம், தனக்கு அடித்தளமாக அமைந்தது என்றும் குறிப்பிட்டார்.
தன் நண்பருடன் இணைந்து நிறுவனத்தை 2019ஆம் ஆண்டு இவர் தொடங்கினார். இவரது தலைமையில் நிறுவனம் வளர்ச்சியும் கண்டது.
“தொழிலில் வளர்ச்சி காண, ஒருவர் தொடர்ந்து தன் வாடிக்கையாளர் தேவைக்கு ஏற்ப மாறிக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்,” என்றார் கிருஷ்ணமணி.
சில ஆண்டுகளிலேயே இவரது நிறுவனத்தின் வருடாந்தரக் கொள்முதல் கோரிக்கைகள், 100,000 முதல் 250,000 வரை அதிகரித்தன. தாய்லாந்து, கம்போடியா, பிலிப்பீன்ஸ், மேற்கு மலேசியா போன்ற பகுதிகளில் தடம்பதித்து இந்நிறுவனம் விரைவில் விரிவடைந்தது.
இந்நிறுவனம் தற்போது ‘சேவை போல விநியோகம்’ எனும் புதிய கட்டமைப்பைச் செயல்படுத்துகிறது. இதன் மூலம் உணவு மட்டுமன்றி தடுப்பூசி மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கான நிலையான விநியோகங்களையும் மேற்கொள்கிறது.
அண்மையில், தளவாடங்கள் பிரிவில் சிறந்த நிர்வாகிக்கான ‘எஸ்பிஆர் நிர்வாக உன்னத விருது 2023’ இவருக்கு வழங்கப்பட்டது.
மாறாத அர்ப்பணிப்பு, தொலைநோக்குச் சிந்தனை, சந்தை மாற்றங்களுக்கு ஏற்ற செயல்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு நிறுவனத்தின் வெற்றி உள்ளது என்று கிருஷ்ணமணி கூறினார்.