சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட வேளாண் விளைபொருள்களை எளிதில் வாங்குவதற்கு உணவகங்களுக்கும் சில்லறை வர்த்தகர்களுக்கும் உதவ, புதிய தேவை, விநியோகத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
முன்னுரைக்கப்பட்ட தேவைகள் குறித்து உள்ளூர் விவசாயிகளுக்கு அதிக நம்பகத்தன்மையையும் அது கொடுக்கும்.
சிங்கப்பூரில் அத்தகைய திட்டம் முதல் முறையாக அறிமுகம் காண்கிறது.
திட்டத்தின்கீழ், வர்த்தக விநியோகத்திற்கு உள்ளூர்ப் பண்ணைகளில் உள்ள காய்கறிகளும் மீன்களும் ஒட்டுமொத்தமாகச் சேகரிக்கப்பட்டு, பதப்படுத்தப்படும். அதன் பிறகு, அவை சில்லறை வர்த்தகர்களுக்கும் உணவு, பான நிறுவனங்களுக்கும் விநியோகிக்கப்படும்.
இந்த நடவடிக்கை உள்ளூர் வேளாண்மைத் துறையைப் பாதிக்கும் தேவை, விநியோகம் தொடர்பான பிரச்சினைகளைக் குறைக்க உதவும். அதோடு, 2030ஆம் ஆண்டுக்குள் தனது சத்துணவுத் தேவைகளில் 30 விழுக்காட்டை உள்ளூரிலேயே தயாரிக்க சிங்கப்பூர் கொண்டுள்ள குறிக்கோளை நிறைவேற்றவும் அது உதவும்.
இத்திட்டம் தொடர்பில், உள்ளூர்ப் பண்ணைகள் இடம்பெற்றுள்ள லாப நோக்கமில்லா அமைப்பான சிங்கப்பூர் வேளாண் உணவுத் தொழில்நிறுவனங்கள் கூட்டமைப்பு, உணவு விநியோகிக்கும் ‘அட் ஃபிரஷ் அன்ட் சீஃபூட் இன்டஸ்டிரீஸ் சிங்கப்பூர்’ சங்கத்துடன் புரிந்துணர்வுக் குறிப்புகளில் கையெழுத்திட்டது.
உள்ளூரில் தயாரிக்கப்படும் காய்கறிகள், கடலுணவுகள் ஆகியவற்றின் தேவைகளை ஒன்றுசேர்ந்து அதிகரிப்பதே அவற்றின் நோக்கம்.
நியோ தியூ ஹார்வஸ்ட் லேனில் ‘கிரீன் ஹார்வஸ்ட்’ எனும் உயர் தொழில்நுட்பப் பண்ணை அதிகாரபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்ட நிகழ்ச்சியில் அந்தப் புரிந்துணர்வுக் குறிப்புகள் கையெழுத்தாயின.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் அந்நிகழ்ச்சியில் பேசியபோது உற்பத்தியாளர்களும் வாடிக்கையாளர்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விளக்கினார்.
பண்ணைகளால் எதிர்காலச் சந்தைத் தேவைகளையும் அறுவடையான விளைபொருள்கள் என்ன விலைக்கு விற்பனையாகும் என்பதையும் மதிப்பிட இயலவில்லை என்றார் அவர்.
அதேவேளையில், சில்லறை வர்த்தகர்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய, போதிய அளவிலும் தரமாகவும் புதிய விளைபொருள்களைப் பெறுவது தொடர்பில் உற்பத்தியாளர்களின் உத்தரவாதத்தைப் பெறமுடியவில்லை என்றும் அவர் கூறினார்.