புதுடெல்லி: அண்மையில் தெலுங்கானாவில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 64 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. தெலுங்கானா மாநிலம் உருவாகி முதன்முறையாக காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.
இந்நிலையில் தெலுங்கானாவின் புதிய முதலமைச்சராக மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.ரேவந்த் ரெட்டி வியாழக்கிழமை ஹைதராபாத்தில் பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், “கட்சியின் தேர்தல் பார்வையாளர்களின் அறிக்கையின் அடிப்படையிலும், மூத்த தலைவர்களுடன் நடத்திய ஆலோசனையின் முடிவிலும், காங்கிரஸ் சட்டசபை கட்சித் தலைவராக ரேவந்த் ரெட்டியை நியமிப்பது என கட்சித் தலைவர் முடிவு செய்துள்ளார்,” என்றார்.
ரேவந்த் ரெட்டியுடன் எத்தனை மந்திரிகள் பதவியேற்பார்கள், துணை முதல்வர் யாரும் இடம்பெறுவார்களா என்ற கேள்விகளுக்கு வேணுகோபால் பதில் அளிக்கவில்லை.