புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணிக் கூட்டம் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் வீட்டில் புதன்கிழமை (டிசம்பர் 6) நடக்க இருந்தது. அந்தக் கூட்டத்தில், 2024 மக்களவைத் தேர்தலுக்கான வியூகம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி தலைவர்கள் முடிவு செய்திருந்தனர்.
ஆனால், இந்தக் கூட்டத்தில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் கலந்துகொள்ள மாட்டார்கள் என அந்தக் கட்சிகளின் வட்டாரங்கள் தெரிவித்தன.
புயல் நிலவரம் காரணமாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் உடல்நலக்குறைவால் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாது என்று தகவல் வெளியானது.
மூன்று மாநிலங்களில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து காங்கிரசுடன் சில இண்டியா கூட்டணிக் கட்சிகளுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதன் காரணமாக சில தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில், இண்டியா கூட்டணியின் கூட்டம் டிசம்பர் 3வது வாரத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
தொடங்கி ஆறு மாதங்களே ஆன நிலையில் இண்டியா கூட்டணி பெரும் பின்னடைவைச் சந்தித்து உள்ளதாகப் பார்க்கப்படுகிறது.