புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கின் பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக ‘அசோசியேட்டட் ஜர்னல்ஸ்’ நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.751.9 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
நிறுவனத்தின் டெல்லி, மும்பை, லக்னோ உள்ளிட்ட நகரங்களில் உள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
இதில், ரூ.661.69 கோடி மதிப்பிலான டெல்லி, மும்பை, லக்னோ போன்ற நகரங்களில் உள்ள அசையாச் சொத்துக்கள், யங் இந்தியா நிறுவனத்தின் ரூ.90.21 கோடி பங்குகள் ஆகியவை அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் இயக்குநர்களாக இருக்கும் ‘யங் இந்தியா’ நிறுவனம், ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை, கடந்த 2010ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. இதில் மிகப்பெரிய அளவில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாகக் கூறி, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி 2013ஆம் ஆண்டு டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறது.
இந்த வழக்கில் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி, தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பவன் குமார் பன்சால் ஆகியோரிடம் ஏற்கனவே அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.