தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து திருப்பூர் சக்தி சுப்ரமணியம் விலகியுள்ளார்.
சொந்த காரணங்களுக்காக அவர் பதவி விலகியிருப்பதாக் கூறியுள்ளார்.
இவருக்கு சொந்தமான திரையரங்குகள் திருப்பூரில் உள்ளது.
இங்கு கடந்த தீபாவளி அன்று அரசு அனுமதித்த நேரத்திற்கு முன்பாக சிறப்பு காட்சிகள் வெளியிட்டதாக புகார்கள் எழுந்தது.
இந்தப் புகாரின் அடிப்படையில் தாசில்தார் நேரடியாக ஆய்வு செய்து அதுதொடர்பான அறிக்கையை திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்ததாக மாலை மலர் தகவல் தெரிவித்தது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு அனுமதித்த நேரத்திற்கு முன்பாக சிறப்பு காட்சிகள் வெளியிட்டதற்கான காரணம் கேட்டு திரையரங்க உரிமையாளர் சக்தி சுப்ரமணியத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்நிலையில் திருப்பூரில் வியாழக்கிழமை சக்தி சுப்பிரமணியம் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளார்கள் சங்கத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாகத் தெரிவித்தார்.
“எனது சொந்த வேலை காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளேன். இதுவரை எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி,” என்று அவர் கூறினார்.