சென்னை: ‘லியோ’ படத்தின் வெற்றி விழா தொடர்பாக அதன் தயாரிப்பு நிறுவனத்துக்கு காவல்துறை கடிதம் அனுப்பியதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெற்றி விழாக் கொண்டாட்டம் எத்தனை மணிக்குத் தொடங்கும், எப்போது முடிவடையும் என காவல்துறை கேள்வி எழுப்பி உள்ளது.
மேலும், நிகழ்வுக்கு நுழைவுச்சீட்டுகள் விற்கப்படுகின்றனவா என்றும் காவல்துறை பாதுகாப்பு இல்லாமல் தனியார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என்றும் விவரம் தெரிவிக்குமாறு காவல்துறை கேட்டுள்ளது.
ஏற்கெனவே, ‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா பாதுகாப்பு காரணங்களால் ரத்தானதாக கூறப்பட்டது. பின்னர் படத்தின் அதிகாலை சிறப்புக் காட்சிக்கும் அனுமதி கிடைக்கவில்லை எனத் தகவல் வெளியானது.
இந்நிலையில், அரசியல் காரணங்களால் இந்தக் கொண்டாட்டம் ரத்தாகிவிடுமோ என விஜய் ரசிகர்கள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது.
எனினும், அனைத்து முக்கிய நிகழ்வுகள் தொடர்பாக காவல்துறை இவ்வாறு விவரங்கள் சேகரிப்பது வழக்கமான நடைமுறை என்று கூறப்படுகிறது.