மும்பை: மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு வழங்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த மராத்தா இன மக்களுக்கு 16 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ஏக்நாத் ஷிண்டே அரசு அமுல்படுத்துவதாக அறிவித்தது. ஆனால், இந்தச் சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததால் சில நாட்களுக்கு முன்பு போராட்டம் வெடித்தது.
40 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று மாநில அரசு உறுதியளித்தும் எந்த தீர்வும் எட்டாததால் மராத்தா மக்கள் வன்முறையில் ஈடுபட்டனர். மரத்வாடா பகுதியில் உள்ள ஜன்னா மாவட்டத்தில் இணையச்சேவைகள் செவ்வாய்க்கிழமை துண்டிக்கப்பட்டன.
வன்முறை பற்றி எரியும் மாவட்டங்களான பர்பாலி, தாராஷூ, ஜன்னா உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் அரசுப் பேருந்துகள் முழுவதும் ரத்து செய்யப்பட்டன.
மேலும் சில பகுதிகளும் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சமூக ஆர்வலர் மனோஜ் ஜராங்கி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.
மராத்தா போராட்டத்தை ஆதரித்து சிவசேனா ஷிண்டே தரப்பில் இரு எம்.பி.க்கள் பதவி விலகினர். மேலும் மூன்று எம்.எல்.ஏக்கள் பதவி விலகுவதாக அறிவித்துள்ளதால் மராட்டிய அரசியலில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்க மும்பையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஏக்நாத் ஷிண்டே, “மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஆதரவு அளித்துள்ளனர். மராத்தா மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது என்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளது. அதேநேரத்தில், இந்த விவகாரத்தில் பொறுமை காக்க வேண்டியது மிகவும் அவசியம்,” என்றார்.
மராத்தா இடஒதுக்கீடு, சட்டத்துக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும், மற்ற சமூகங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும். இது தொடர்பாக ஆராய ஓய்வுபெற்ற மூன்று நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.