"தமிழக இட ஒதுக்கீட்டுக்கு சட்டப் பாதுகாப்பு உள்ளது"
சென்னை: தமிழகத்தில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு நிச்சயம் பின்பற்றப்படும் என சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும் என்பதே முதல்வர் மு.க.ஸ்டாலினின் நோக்கம் என்றார். தமிழகத்தில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு இருப்பதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
"இந்திய அரசியலைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில்தான் தமிழகத்தின் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை இதுதான் நமக்குள்ள முக்கிய ஆயுதம். நமக்கு மாபெரும் சட்ட பாதுகாப்பு கிடைத்திருக்கிறது," என்றார் அமைச்சர் ரகுபதி.
69 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்காக தமிழகத்தில் சட்டம் இயற்றப்பட்டதாக குறிப்பிட்ட அவர், அந்தச் சட்டத்தின் கீழ் அதிபரின் ஒப்புதல் பெறப்பட்டு பின்னர் அரசியலமைப்பு சட்டத்திலும் சேர்க்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
"உச்ச நீதிமன்றத்தில் இட ஒதுக்கீடு சம்பந்தப்பட்ட வழக்கை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம். இதன் மூலம் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு அங்கீகாரம் பெற்றுள்ளோம். இனி இந்த இட ஒதுக்கீட்டை எப்படி பாதுகாப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளோம்," என்றார் அமைச்சர் ரகுபதி.
மகாராஷ்டிராவில் அண்மையில் 'மராத்தா' சமூகத்துக்கு கல்வி, வேலைவாய்ப்பில் அளிக்கப்பட்ட உள் ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் அண்மையில் ரத்து செய்தது. இதையடுத்து தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டை தொடர முடியுமா எனும் கேள்வி எழுந்துள்ளது. இதையடுத்து சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து ஆலோசனை நடத்தினார்.