ஹைதராபாத்: கோதாவரி ஆற்றைத் தடுத்து ரூ.1 லட்சம் கோடியில் கட்டப்பட்ட காலேஸ்வரம் அணையின் தூண்கள் சரிய பல்வேறு தவறுகளே காரணம் என தேசிய அணைகள் பாதுகாப்பு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
முதல்வர் சந்திரசேகர ராவின் ஆட்சியில் கடந்த 2019ல் காலேஸ்வரம் மேடிகட்டா அணை ரூ.1 லட்சம் கோடி செலவில் கட்டப்பட்டது. ஆனால் இந்த அணை கட்டப்பட்டதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகத் தொடக்கத்திலிருந்தே எதிர்க்கட்சிகளான காங்கிரசும் பாஜகவும் குற்றம்சாட்டி வருகின்றன. இதனிடையே இந்த அணையின் 15வது தூண் முதல் 20வது தூண் வரை அண்மையில் ஆற்று மண்ணில் புதைந்தது.
இதுதொடர்பாக தேசிய அணைகள் பாதுகாப்பு வாரிய அதிகாரிகள் நேரில் வந்து அணையின் நிலையை ஆய்வு செய்து, அணை மீது செல்லும் போக்குவரத்தை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இந்த அணை மீதான வாகனப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு மாற்று பாதை ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 21ஆம் தேதி கோதாவரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள இந்த அணையின் தூண்களில் சில மண்ணில் புதைந்ததற்கான காரணத்தையும் எங்கு தவறு நடந்தது என்பதை கண்டறியவும் தேசிய அணைகள் பாதுகாப்பு வாரியம் ஆய்வறிக்கை தாக்கல் செய்தது. அதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
அணையின் திட்டம், வரைபடம் போன்றவை சரியில்லை எனவும் ஒரு பிளாக்கில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் மொத்த அணையும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அணையை பயன்படுத்தக்கூடாது என்றும் அது மிகவும் ஆபத்தில் முடியுமென்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுதவிர, அணைக்கு தொடர்புள்ள 20 கேள்விகள் மாநில அரசிடம் கேட்கப்பட்டதில், அவர்கள் அதில் வெறும் 12க்கு மட்டுமே பதில் அளித்துள்ளதாகவும் தேசிய அணைகள் பாதுகாப்பு வாரியம் தெரிவித்துள்ளது.
ரூ. 80,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் தொடங்கப்பட்ட இந்த மாபெரும் காலேஸ்வரம் அணைதான் தெலுங்கானாவுக்கே பெருமை என மார் தட்டிக்கொண்டிருந்த முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசுக்கு தற்போது இந்த அறிக்கை பின்னடைவாக அமைந்துள்ளது.
அரசின் பல்வேறு தவறுகளே இந்த அணையின் நிலைக்கு காரணம் என அறிக்கை கூறுகிறது.