ஹைதராபாத்: “தெலுங்கானாவில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஏராளமான நிலங்களைக் குவித்து வைத்திருக்கும் செல்வந்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையேதான் போட்டி,” என்று காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
நவம்பர் 30ஆம் தேதி தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில், அங்கு போட்டியிடும் கட்சிகள் விறுவிறுப்பான தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய அக்கட்சியின் முக்கியத் தலைவரும் வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி தெலுங்கானா சென்றுள்ளார்.
ராகுல் காந்தி காங்கிரஸ் சார்பில் நடந்துவரும் விஜயபேரி நடைப்பயணத்தில் வியாழக்கிழமை கலந்துகொண்டார். அதில், பூபால்பள்ளியில் இருந்து பெத்தாபள்ளி செல்லும் வழியில் நடந்த தெருமுனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர், “இந்தத் தேர்தலில் கே.சந்திரசேகர ராவ் தோல்வியைத் தழுவுவார். இந்தத் தேர்தலில் டோரலா (செல்வந்தர்கள்) தெலுங்கானாவுக்கும் பிரஜலா தெலுங்கானாவுக்கும் (குடிமக்கள்) இடையேதான் போட்டி நடக்கிறது.
“அதாவது ராஜாவுக்கும் குடிமக்களுக்கும் இடையிலான போட்டி இது. இந்த பத்தாண்டு கால ஆட்சியில் தெலுங்கானா முதல்வர் கேசிஆர் எனப்படும் கே.சந்திரசேகரராவ் தொடர்ந்து மக்களின் குறைகளுக்குச் செவிசாய்க்காமல் அவர்களிடம் விலகியே இருக்கிறார். மாநிலத்தில் ஊழல்கள் மலிந்து காணப்படுகின்றன. மாநிலத்திற்கான அனைத்து அதிகாரங்களையும் ஒரு குடும்பத்தினர் மட்டுமே வைத்துக்கொண்டு மக்களை ஆட்டிப்படைத்து வருகின்றனர்.
“மத்தியில் ஆளும் பாஜக அரசு, நாடு முழுதும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமான வரித்துறையை ஏவிவிட்டு வழக்குகள் பதிந்து வருகிறது. ஆனால், இங்கு கேசிஆரை மட்டும் காப்பாற்றி வருகிறது. ஊழலில் மூழ்கிப்போன கேசிஆர் மீது சிபிஐ அல்லது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்காதது மக்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.