புதுடெல்லி: எதிர்க்கட்சித் தலைவர்களின் கைப்பேசி ஒட்டுக் கேட்கப்படுவதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற செயலை நேர்மையானவர்கள் செய்யமாட்டார்கள். குற்றவாளிகளே இதுபோன்ற செயலில் ஈடுபடுவார்கள் என்று சாடியுள்ளார்.
இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள், ஊடகவியலாளர்களின் கைப்பேசி ஒட்டுக் கேட்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது..
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சசிதரூர் (காங்கிரஸ்), மகுவா மொய்த்ரா (திரிணாமூல் காங்கிரஸ்), ராகவ் சத்தா (ஆம் ஆத்மி), சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே பிரிவைச் சேர்ந்த (யுபிடி) பிரியங்கா சதுர்வேதி, தி வயர் பத்திரிகையின் நிறுவன ஆசிரியர் சித்தார்த் வரதராஜன், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் ஆப்பிள் நிறுவனத்தின் எச்சரிக்கைத் தகவலைப் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
2019ஆம் ஆண்டில் பெகாசஸ் மென்பொருள் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்கள், ஊடகவியலாளர்களின் கைப்பேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக சர்ச்சை எழுந்தது.
இப்போது, தங்கள் கைப்பேசிகளில் ஊடுருவி மத்திய பாஜக அரசு உளவு பார்க்க முயற்சி செய்வதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர், திரிணாமூல் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் மகுவா மொய்த்ரா உள்ளிட்டோர் புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவர்களின் கைப்பேசி ஒட்டுக்கேட்கப்படுவதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தனிப்பட்ட உரையாடல்களை ஒட்டுக்கேட்பது நேர்மையானவர்கள் செய்யும் செயல் அல்ல, குற்றவாளிகள் செய்யும் செயல் என ராகுல் காந்தி சாடியுள்ளார்.