புபல்பள்ளி: இந்தியாவிலேயே கே.சந்திரசேகர ராவ் முதல்வராக இருக்கும் தெலுங்கானாதான் ஆக அதிக ஊழல்கள் தலைவிரித்தாடும் மாநிலமாக உள்ளது என்று ராகுல் காந்தி சாடியுள்ளார். தெலுங்கானா மாநிலம் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நவம்பா் 30ஆம் தேதி தெலுங்கானாவில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் மூன்றாவது முறையாக வெற்றி பெறும் நோக்கில் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி மும்முரமாக பிரசாரத்தில் இறங்கியுள்ளது. காங்கிரஸ், பாஜக ஆகியவையும் சேர்த்து தோ்தல் களத்தில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. எனினும், காங்கிரஸ் கட்சியே பாரத ராஷ்டிர சமிதிக்கு முக்கிய போட்டியாகக் கருதப்படுகிறது.
இந்த நிலையில், தெலுங்கானாவில் மூன்று நாள் தேர்தல் பிரசாரப் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, விஜயபேரி நடைப்பயணத்தின் போது புபல்பள்ளியில் தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது, தெலுங்கானாவில் மக்கள் ஆட்சி நடக்கும் என கனவு கண்டீர்கள். ஆனால், இங்கு ஒரே குடும்பத்தின் ஆட்சி நடக்கிறது.
மாநிலத்தின் முழுக் கட்டுப்பாடும் ஒரே ஒரு குடும்பத்தின் கையில் உள்ளது. இது தெலுங்கானா இளைஞர்கள் மற்றும் பெண்களை மோசமாக பாதிக்கிறது என்றும் நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்த அரசு கே. சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு தான்.
கடந்த பத்து ஆண்டுகளாக மக்களுக்கும் கே.சி.ஆருக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்து வருகிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சந்திரசேகர ராவ் தோல்வியை சந்திக்கப் போகிறார் என்று ராகுல் காந்தி கூறினார். மேலும் அவர், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று உறுதி தெரிவித்தார். சாதிவாரிக் கணக்கெடுப்பது என்பது நாட்டின் மிக முக்கிய விவகாரம். ஆனால், இது பற்றி பிரதமர் நரேந்திர மோடியும், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் மௌனம் சாதித்து வருகிறார்கள் என்றார்.
ராகுல், பிரியங்கா காந்தி இருவரின் மூன்று நாள் பயணத்தின் போது, பொதுக் கூட்டங்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது தெலுங்கானா காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு கணிசமான ஊக்கத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், புதன்கிழமை தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய முதல்வர் சந்திர சேகர ராவ், காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவில் ஆட்சியைப் பிடித்தால் இங்கு அமல்படுத்தப்பட்டுள்ள முக்கிய திட்டங்கள் அனைத்தையும் முடக்கிப் போட்டுவிடும் என்று பேசியுள்ளார்.