புதுடெல்லி: பாலஸ்தீன எல்லையில் தொடரும் போர் பிரச்சினை குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு, பிரதமர் நரேந்திர மோடியைத் தொலைபேசியில் செவ்வாய்க்கிழமை தொடர்புகொண்டு பேசினார்.
‘‘இந்த கடினமான நேரத்தில் இந்திய மக்கள், இஸ்ரேலுடன் உறுதியாக துணை நிற்கின்றனர். தீவிரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் இந்தியா கடுமையாகவும் சந்தேகத்துக்கு இடமின்றியும் கண்டிக்கிறது,’’ என்று அப்போது, நெட்டன்யாகுவிடம் மோடி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7ஆம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். சுமார் 5 ஆயிரம் ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தாக்குதலைத் தொடங்கினர்.
இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டுள்ளது. பதிலுக்கு இஸ்ரேலும் தனது தீவிர தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இருதரப்பிலும் 1,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில், ஹமாஸ் படை வசம் இருந்த காஸா எல்லை பகுதி, தெற்கு பகுதிகளை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, தொடர்ந்து 4வது நாளாக இருதரப்புக்கும் இடையே போர் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெடன்யாகு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது, இஸ்ரேலில் உள்ள நிலைமை குறித்து பிரதமர் மோடியிடம், நெட்டன்யாகு விளக்கினார்.