கேங்டாக்: சிக்கிம் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் 77 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று நம்பப்பட்ட 140க்கு மேற்பட்டோரில் 62 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிக்கிம் மாநிலத்தில் பெய்த மழை, வெள்ளத்தில் சிக்கிய 3,000 சுற்றுலாப் பயணிகள் தவித்து வருகிறார்கள். அவர்களை மீட்க இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த புதன்கிழமை அதிகாலை சிக்கிமில் உள்ள லோனாக் ஏரிப் பகுதியில் மேக வெடிப்பால் கனமழை பெய்தது. இதனால், அங்கு பாயும் தீஸ்தா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வெள்ளத்தால் சுங்தாங் பகுதியில் நீா்மின் திட்ட அணை உடைந்தது. இதன் காரணமாக மங்கன், கேங்டாக், நாம்சி, பாக்யாங் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பல்வேறு நகரங்களிலும் சிற்றூர்களிலும் பெருமளவு தண்ணீா் சூழ்ந்தது.
வெள்ளத்தால் 4 மாவட்டங்களில் 41,870 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். மங்கன் மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள சுமாா் 30,300 போ் வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளனா், 1,200 வீடுகள் சேதம் அடைந்துள்ளன என்று சிக்கிம் மாநிலப் பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா, சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங்கை கேங்டாக்கில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தின் நிலைமை குறித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது பேசிய அமைச்சர் மிஸ்ரா, சிக்கிம் வெள்ள நிலவரத்தை அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், மாநிலத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்துதரப்படுவதாகவும் தெரிவித்தார்.
இந்திய இராணுவம் சனிக்கிழமையன்று 8 ராணுவ வீரர்களின் இழப்புக்கு இரங்கல் தெரிவித்தது. அத்துடன் “காணாமல் போன 14 வீரர்கள் மற்றும் பிற பொதுமக்களைக் கண்டுபிடித்து மீட்பதற்கான ஒருங்கிணைந்த தேடல் மற்றும் மீட்பு முயற்சிகள் தொடர்கின்றன,” என்று ராணுவம் கூறியது.
சிக்கிம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (எஸ்எஸ்டிஎம்ஏ) சுமார் 2,413 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 1,203 வீடுகள் திடீர் வெள்ளத்தில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதுவரை 25,065 பேர் பேரிடர்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 6,875 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.