புதுடெல்லி: அறிவியல் காரணங்களுக்காகவே வந்தே பாரத் ரயிலுக்கு காவி நிறம் பூசப்பட்டது என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் எந்தவித அரசியலும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மனிதர்களின் கண்களுக்கு இரு நிறங்கள்தான் மிகவும் தெளிவாக நீண்டதூரத்துக்கு அப்பால் இருந்தும் புலப்படும்.
“அவற்றில் ஒன்று மஞ்சள், இன்னொன்று காவி நிறம். ஐரோப்பிய நாடுகளில் 80 விழுக்காட்டு ரயில்கள் இந்த இரண்டு நிறங்களில்தான் உள்ளன.
“ஒரு சில இடங்களில் வெள்ளி நிறம் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் ஒப்பீட்டு அளவில் வெள்ளி நிறத்தைவிட ஆரஞ்சு, மஞ்சள் நிறங்கள்தான் அதிக அடர்த்தியுடன் பார்வைக்குப் புலப்படும் என்பதால் இந்த நிறங்களை புதிய வந்தே பாரத் ரயில்களுக்குப் பயன்படுத்துகிறோம்.
“இதன் பின்னணியில் 100 விழுக்காடு அறிவியல்தான் இருக்கிறது; அரசியல் எதுவும் இல்லை.
விமானங்கள், கப்பல்களில் உள்ள கறுப்புப் பெட்டிகளின் நிறம் ஆரஞ்சாக இருப்பதற்கும் இதுதான் காரணம்.
“அதேபோல் உயிர்காக்கும் கவச உடைகளுக்கும் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு இந்த நிறத்தைத்தான் பயன்படுத்துகிறது” என்று விளக்கினார்.