புதுடெல்லி: இந்தியாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் வந்தே பாரத் ரயில்களில் புதுமையான ஒரு துப்புரவு இயக்கத்தை அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே ஆயத்தமாகி உள்ளது.
அந்தத் திட்டத்திற்கு ‘14 நிமிட அதிசயம்’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. அந்த இயக்கத்தை ஞாயிற்றுக்கிழமை மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார்.
அந்தத் திட்டத்தின்படி வந்தே பாரத் ரயில்கள் முழுவதும் 14 நிமிடங்களில் துப்புரவு செய்யப்படும். அடுத்த பயணத்திற்கு தயாராகிவிடும். இப்போது ஒவ்வொரு ரயிலையும் முழுமையாகச் சுத்தம் செய்ய சுமார் 45 நிமிடங்கள் பிடிக்கின்றன.
டெல்லி, சென்னை, பூரி, ஷிரடி உள்ளிட்ட 29 ரயில் நிலையங்களில் நின்று செல்லும் வந்தே பாரத் ரயில்களில் புதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்று ரயில்வே அமைச்சர் தெரிவித்தார்.
பல்வேறு வழித்தடங்களிலும் செயல்படும் வந்தே பாரத் ரயில்களில் அன்றாடம் இந்த 14 நிமிட அதிசயத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
இந்தத் திட்டம் சில மாதங்களில் இதர விரைவு ரயில்களிலும் இடம்பெறும் என்று அமைச்சர் கூறினார்.
நாடு முழுவதும் பணியாற்றக்கூடிய ரயில்வே ஊழியர்கள் வேகமாக, பொறுப்புடன் செயல்பட்டு பயணிகளுக்கு எந்த தொல்லையும் இல்லாமல் இந்தத் திட்டத்தை திறம்பட நிறைவேற்றி வருவார்கள் என்று மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் கூறினார்.