மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தில்லையாடி கிராமத்தில் நாட்டு வெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் புதன்கிழமை பிற்பகல் நிகழ்ந்த விபத்தில் நால்வர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
தில்லையாடி கிராமத்தில் காத்தாயி அம்மன் கோயில் அருகில் மோகன் என்பவருக்குச் சொந்தமான நாட்டு வெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.
அங்கு நாட்டு வெடிகள், வாணவெடிகள் உள்ளிட்ட வெடி வகைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புதன்கிழமை நண்பகல் நேரத்தில் அங்கு நிகழ்ந்த திடீர் தீ விபத்தில் கிடங்கில் இருந்த வெடிகள் அனைத்தும் வெடித்துச் சிதறின. சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளில் அதிர்வு உணரப்பட்டது.
அந்த விபத்தில் அங்கு வேலை பார்த்த நான்கு பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். உடல் பகுதிகள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூர அளவுக்கு தூக்கி வீசப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், நால்வர் காயமடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.
அருகில் உள்ள வீடுகளிலும் புகை சூழ்ந்ததால் பாதிப்பு ஏற்பட்டது. பொறையாறு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.