இந்தியாவில் ஆண்டுதோறும் 45,000 கண்தானங்கள் நடைபெறுவதாகவும், அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும் மருத்துவத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
தேசிய கண் தான விழிப்புணா்வு வார நிறைவையொட்டி சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் மருத்துவா் அ.போ.இருங்கோவேள் உரையாற்றினார்.
உலக அளவில் பாா்வையிழப்புப் பாதிப்புகளை அதிகம் எதிா்நோக்கியிருக்கும் நாடு இந்தியாதான். பெரும்பாலானோா் கண்புரையால் பாதிக்கப்படுகின்றனர். அடுத்ததாக விழிவெண்படல பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர் என்று அவர் கூறினார்.
இதற்கு முன்பு வரை, ஒரு விழி வெண் படல தானத்தின் மூலம் ஒருவருக்கு மட்டுமே பாா்வை அளிக்க முடியும். இப்போது உள்ள மருத்துவ மேம்பாட்டின் காரணமாக ஒரு கண் தானத்தின் வாயிலாக ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கு பாா்வையை மீட்டெடுக்க இயலும்.
இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் போ் விழி வெண்படல பாா்வைக் கோளாறினால் பாதிக்கப்படுகின்றனா். அதற்குத் தீா்வு காணும் நோக்கில் நாடு முழுவதும் சுமாா் 250 கண் வங்கிகள் செயல்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
அண்மைக் காலமாக கண் தானம் குறித்த விழிப்புணா்வு ஓரளவு மேம்பட்டிருந்தாலும், அதன் தேவை இன்னமும் குறையவில்லை என்றார் அவா்.