பெங்களூரு: விபத்தில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநரைக் காப்பற்றியவர், அவரது ஆட்டோவை ஓட்டிச் சென்றுவிட்டார்.
இச்சம்பவம் இந்தியாவின் கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் நிகழ்ந்துள்ளது.
இம்மாதம் 3ஆம் தேதி நிகில், 38, என்பவர் ஓட்டிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதனடியில் சிக்கிக்கொண்ட நிகிலை அவ்வழியே சென்ற சிலர் காப்பாற்றினர். பின்னர் அவரது ஆட்டோவையும் தூக்கி நிறுத்தினர்.
காயத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிகில், மூன்று மணி நேரத்திற்குப்பின் விபத்து நிகழ்ந்த இடத்திற்குத் திரும்பினார். ஆனால், அங்கு அவரது ஆட்டோவைக் காணவில்லை.
“இரண்டு மாதங்களுக்கு முன்னர் ரூ.3.5 லட்சம் கொடுத்து அந்த ஆட்டோவை வாங்கினேன். தனியார் நிறுவனத்தில் கடன் பெற்றே அதனை வாங்கினேன். அதற்காக மாதம் ரூ.10,000 தவணை செலுத்தி வருகிறேன். ஆட்டோ காணாமல் போனது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தேன். ஆட்டோவைக் கண்டுபிடிக்க சிறிது காலம் தேவை என்று காவல்துறையினர் கூறினர்,” என்று நிகில் கூறினார்.
இதனிடையே, நிகிலைக் காப்பாற்றியவர்களில் ஒருவரே அவரது ஆட்டோவை ஓட்டிச் சென்றது கண்காணிப்புப் படக்கருவியில் பதிவான காணொளியில் தெரிந்தது. காவல்துறை அவரைத் தேடி வருகிறது.