சாங்கி ரோட்டில் உள்ள தாவோ சமயக் கோயில் உண்டியல்களில் இருந்து “ஆயிரக்கணக்கான” வெள்ளி திருடப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதையடுத்து கதவுகளின் பூட்டுகளை மாற்றப்போவதாக ஹூன் சியன் கெங் என்ற அந்தக் கோயில் தெரிவித்துள்ளது.
இரண்டு சந்தேகநபர்கள் சனிக்கிழமை விடிகாலை 1.50 மணிக்கு அந்தக் கோயிலின் பூட்டுகளில் கைவரிசை காட்டிக்கொண்டு இருந்ததை கோயிலின் பிரத்தியேகப் படச்சாதனங்கள் எடுத்த படங்கள் காட்டின.
சம்பவம் நிகழ்ந்தபோது அந்தக் கோயில் மூடப்பட்டு இருந்தது. திருட்டு தொடர்பில் விடிகாலை 2.20 மணிக்குக் காவல்துறையுடன் கோயில் தொடர்புகொண்டது.
கோயில் பிரகாரத்தில் யாரும் இல்லை என்பதைத் தெரிந்துகொண்ட அந்தத் திருடர்கள் ஒரு கைவிளக்கை அடித்து உண்டியலில் பணம் இருக்கிறதா என்று பார்த்தனர். பிறகு நீண்ட ஒரு குச்சியை இரண்டு உண்டியல்களிலும் உள்ளே விட்டு அப்படியும் இப்படியுமாக அதைப் பல முறை திருப்பினர்.
அந்தக் குச்சியின் முனைப் பகுதியில் கோந்து போன்ற பசை இருந்தது. குச்சியை வெளியே எடுத்து உருவி அதில் ஒட்டிக்கொண்ட பணத்தை திருடர்கள் எடுத்துக்கொண்டனர்.
கோயிலின் நிர்வாகக் குழு உறுப்பினர்களில் ஒருவரான ஒரு மாது அந்தக் கோயிலில் வசிக்கிறார். அவர் திருடர்களைப் பார்த்துவிட்டார். அதைக் கண்டுகொண்ட திருடர்கள் உடனே தப்பி ஓடிவிட்டனர்.
அந்த மாது நிர்வாகக் குழுவின் இதர உறுப்பினர்களுடன் தொடர்புகொண்டார். அவர்கள் கோயிலில் வேறு யாராவது திருடர்கள் ஒளிந்து இருக்கிறார்களா என்பதைத் தேடிப் பார்த்தனர் என்று அந்தக் கோயிலின் உதவிப் பொருளாளர் திரு இசாக் தோங் ஞாயிற்றுக்கிழமை கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
எவ்வளவு பணம் திருட்டுப் போனது என்பதை கோயில் தெரிவிக்கவில்லை.
இதனிடையே, புகார் தாக்கலாகி இருப்பதாகவும் புலன்விசாரணை நடந்து வருவதாகவும் காவல்துறை தெரிவித்தது.
சிங்கப்பூரில் உள்ள பல்வேறு கோயில்களில் $11,930 திருடியதாக சீனாவைச் சேர்ந்த இருவருக்கு கடந்த ஜனவரி மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் மூன்று மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாக ஷின் மின் சீன நாளிதழ் தெரிவித்து இருந்தது.