மலர்ந்துள்ள ஆங்கிலப் புத்தாண்டில் எந்தெந்த நடிகைகள் வளர்ச்சி காண வாய்ப்பு உள்ளது என ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். வாய்ப்புள்ள நடிகைகள் குறித்து ஓர் அலசல்.
விஷாலின் ’ஆக்ஷன்’ படம், தனுஷுடன் ‘ஜகமே தந்திரம்’ படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஐஸ்வர்யா லட்சுமி, பின்னர் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரு பாகங்களிலும் நடித்திருந்தார்.
இப்படங்களில் இவர் ஏற்று நடித்த பூங்குழலி கதாபாத்திரத்திற்காக ரூ.1.5 கோடி ஊதியம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது. மலையாளத்தில் மம்முட்டியுடன் ‘கிறிஸ்டோபர்’, துல்கர் சல்மானுடன் ‘கிங் ஆஃப் கோத்தா’ உள்ளிட்ட படங்களில் நடித்து தனது நடிப்புத் திறமையை நிரூபித்துள்ளார் ஐஸ்வர்யா லட்சுமி.
[ο]வெற்றி தோல்விகளுக்கு மத்தியில் தொடர்ந்து தனி நாயகியாக நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தயாரிப்பு தரப்பின் நிலைமையைக் கவனித்து அதற்கேற்ப தனது ஊதியத்தை அவர் நிர்ணயிப்பதாக திரை உலகத்தினர் இவரைப் பாராட்டுகிறார்கள்.
குறைந்த பட்சம் 50 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார். கடந்த ஆண்டு ‘தீரா காதல்’, ‘சொப்பன சுந்தரி’, ‘ரன் பேபி ரன்’, ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ உள்ளிட்ட படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.
[ο]கடந்த இரண்டு ஆண்டுகளாக தென்னிந்திய மொழிகளில் பிரியா பவானி சங்கருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. கடந்த ஆண்டில் தமிழிலும் தெலுங்கிலுமாக ஐந்து படங்களிலும் இணையத்தொடர் ஒன்றிலும் நடித்து அசத்தியுள்ளார்.
வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும் இப்போதுவரை சம்பளத்தில் எந்தவிதமான கறாரும் காட்டுவதில்லை என்றும் இப்போது வரை அதிகபட்சமாக ஒரு கோடி ரூபாய் மட்டுமே ஊதியமாக பெறுகிறார் என்றும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு தமிழில் ‘அகிலன்’, ‘பத்து தல’, ‘ருத்ரன்’, ‘பொம்மை’, தெலுங்கில் ‘கல்யாணம் கமணீயம்’ படங்களில் நடித்துள்ளார்.
[ο]திரிஷாவிற்கு திரை உலகில் மறுவாழ்வு அளித்துள்ளது ‘பொன்னியின் செல்வன்’ படம். திரை உலகில் நடிக்கத் தொடங்கி 23 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் ‘லியோ’ படத்திற்காக இவர் ஐந்து கோடி ரூபாய் ஊதியம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
தற்போது அஜித்துடன் ‘விடாமுயற்சி’, மலையாளத்தில் மோகன்லாலுடன் ‘ராம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
தெலுங்கில் நடிக்க ஐந்து கோடி ரூபாய் வரை ஊதியம் பெறுகிறார் ஷ்ருதிஹாசன். அங்கு சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா போன்ற மூத்த நடிகர்களுடன் நடித்த நிலையில், அண்மையில் வெளியீடு கண்ட பிரபாஸின் ‘சலார்’ படத்திலும் நடித்துள்ளார்.
இந்தப் படத்திற்காக அவர் எட்டு கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இவரது நடிப்பில் உருவாகும் ஒரு ஹாலிவுட் படமும் இந்திப் படம் ஒன்றும் புத்தாண்டில் வெளியாக உள்ளன.
[ο]கீர்த்தி சுரேஷ் மூன்று கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார். தமிழில் அவரது கைவசம் மூன்றுக்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன.
பூஜா ஹெக்டேவைப் பொறுத்தவரை நான்கு கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாகவும் இப்புத்தாண்டின் தொடக்கத்தில் அவர் இந்திப் படங்களில் மட்டுமே கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
[ο]பொங்கலுக்கு வெளியாகும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார் பிரியங்கா மோகன். மேலும் ஜெயம் ரவியுடன் ‘பிரதர்’, தெலுங்கில் நானி, பவன் கல்யாண் படங்கள் என தொடர்ந்து பரபரப்பாக வலம் வருகிறார். தற்போது இவர் இரண்டு கோடி ரூபாய் வரை ஊதியமாக பெறுவதாக தெரிகிறது.
[ο]தென்னிந்திய திரை ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் நாயகிகளின் பட்டியலில் ராஷ்மிகா மந்தனாவுக்கு நிச்சயம் இடம் உண்டு.
தற்போது 4 முதல் 6 கோடி ரூபாய் வரை ஊதியமாகப் பெறுகிறார். தமிழ், தெலுங்கில் மட்டுமல்லாமல் இந்தியிலும் இவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
எனினும், முதலில் தேடி வரும் வாய்ப்புகளைத்தான் ஏற்றுக்கொள்கிறார் ராஷ்மிகா. இந்தியில் அதிக ஊதியம் கிடைத்தாலும் அது குறித்தெல்லாம் இவர் கவலைப்படுவதில்லை.
‘புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகம் உட்பட நான்கைந்து முக்கியமான படங்களைக் கைவசம் வைத்துள்ளார் ராஷ்மிகா. இவை அனைத்துமே மிகப் பெரும் பொருள்செலவில் தயாராகும் படங்கள்.
எனவே, நடப்பாண்டில் தென்னிந்தியக் கனவுக்கன்னியாக இவர்தான் வலம்வருவார் என ரசிகர்களில் ஒரு தரப்பினர் அடித்துக் கூறுகின்றனர்.
இதற்கிடையே, தெலுங்கில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் ஸ்ரீலீலா, கிரித்தி ஷெட்டி உள்ளிட்டோரும் அதிக எண்ணிக்கையிலான படங்களில் நடிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இதேபோல் மற்ற முன்னணி நடிகைகளுக்கும் சிலர் குரல் கொடுக்கிறார். முன்னணி நாயகிகள் மத்தியில் மறைமுகப் போட்டி நடைபெற்று வருகிறது.
“இதன் காரணமாக முன்னணி நாயகிகளில் சிலர் ஊதியத்தைக் குறைத்துக் கொள்ளும் வாய்ப்புள்ளது. அவ்வாறு நடந்தால் தயாரிப்புச் செலவு குறையும் என்பது தயாரிப்பாளர்களுக்கு மகிழ்ச்சி தரும்,” என்கிறார்கள் திரையுலக விவரப் புள்ளிகள்.