ஒருசில கதாபாத்திரங்களில் நடிக்கும்போது மட்டுமே மிகுந்த மனநிறைவு ஏற்படுவதாகக் கதாநாயகிகள் கூறுவதுண்டு. முன்பெல்லாம் தங்களுடைய கனவுக் கதாபாத்திரம் என்றும் அவர்கள் ஏதேனும் ஒரு வேடத்தைக் குறிப்பிடுவதுண்டு.
திரையுலகம் பல்வேறு மாற்றங்களை எதிர்கொண்டு வரும் இவ்வேளையில், நடிகைகள் பல்வேறு வேடங்களை தங்களுடைய கனவுக் கதாபாத்திரங்கள் என்று குறிப்பிட்டுப் பட்டியலிடுகிறார்கள். அந்த வகையில் சில முன்னணி நாயகிகளின் கனவுக் கதாபாத்திரங்கள் குறித்து பார்ப்போம்.
ராமாயணத்தை மையமாகக் கொண்டு இந்தியில் உருவாகும் படத்தில் சீதையாக நடிக்கிறார் சாய் பல்லவி. இது முப்பரிமாண தொழில்நுட்பத்தில் உருவாகும் படம். ராமராக ரன்பீர் கபூர் நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் உருவாகும் இப் படத்தை நித்திஷ் திவாரி இயக்குகிறார்.
“இயக்குநர் நித்திஷ் எனக்குள் இருக்கும் சீதையை எப்படிக் கண்டறிந்தார் என்பது வியப்பும் மகிழ்ச்சியும் அளிக்கிறது,” என்கிறார் சாய் பல்லவி. இதுபோன்ற வாய்ப்புகள் கிடைப்பது மிக அரிது என்றும் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
“எனக்கு அதிர்ஷ்டம் அதிகம் என நினைக்கிறேன். சீதையாக என்னைத் திரையில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை. எப்போது அழைப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்.
“இது ஒரு சவாலான கதாபாத்திரம். புகழ்பெற்ற நடிகைகள் நடித்த வேடம். அவர்கள் நடித்ததில் பத்து விழுக்காடு நடிப்பை தந்தாலும், நான் நன்றாக நடித்திருப்பதாக அர்த்தம்.
“விரைவில் திரைக்கதையைக் கேட்கவும் கால்ஷீட் குறித்து விவாதிக்கவும் மும்பை செல்கிறேன். ஏற்கெனவே இந்திய சினிமாவில் பல ராமாயணப் படங்கள் வந்துள்ளன. ஆனால் வால்மீகி ராமாயணத்தை யாரும் முழுமையாகக் காட்டவில்லை. இந்தப்படம் அந்தக் குறையைப் போக்கும்,” என்கிறார் சாய் பல்லவி.
விமானப் படை அதிகாரியாகக் கங்கனா
இதற்கிடையே ‘தேஜஸ்’ இந்திப் படத்தில் தமது கனவுக் கதாபாத்திரங்களில் ஒன்றான விமானப் படை அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார் கங்கனா ரணவத். வரும் 27ஆம் தேதி இப்படம் திரைகாண உள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு இந்திய விமானப் படை வரலாற்றில் முதன் முறையாகப் போர் விமானங்களை இயக்குவதற்கு மூன்று பெண் விமானிகள் நியமிக்கப்பட்டனர். அதை மையமாகக் கொண்டு சில கற்பனைச் சம்பவங்களையும் வைத்து இப்படத்தை உருவாக்கி உள்ளனர்.
“இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிப்பதன் மூலம் நாட்டுக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமைகளை முழுமையாக உணர முடிகிறது,” என்கிறார் கங்கனா.
அதிரடி நாயகி கேத்ரீனா
நடிகை கேத்ரீனா கைஃப்புக்கு அடிதடிப் படங்கள் என்றால் ரொம்பப் பிடிக்குமாம். அதிரடி நாயகியாக நடிப்பதே தமது கனவு என்றும் பல பேட்டிகளில் அவர் குறிப்பிட்டதுண்டு. அந்த வகையில், ‘டைகர் 3’ என்ற இந்திப் படத்தில் நடித்துள்ளார்.
“சண்டைக் காட்சிகள் இருப்பதால் உடல் ரீதியாக இது எனக்குச் சவாலான படம். எப்போதுமே சண்டைக் காட்சிகளில் பங்கேற்பது உற்சாகமாக இருக்கும். நான் எப்போதும் போல் ஆக்ஷன் படங்களின் ரசிகைதான்,” என்று தெரிவித்துள்ளார் கேத்ரீனா.