சிம்புவின் 48வது படம் ‘பாகுபலி’ படத்திற்கு இணையாக ஒரு பிரம்மாண்டமான சரித்திர கதையாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.
‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் 2020ல் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்தப் படத்திற்குப் பிறகு இதுவரை இயக்குநர் தேசிங்கு பெரியசாமி எந்தப் படமும் இயக்கவில்லை.
ரஜினிகாந்தை வைத்து புதுமாதிரியான படத்தை இயக்க கதையைத் தயார் செய்து வைத்திருந்தார். ஆனால், அந்தப் படத்திற்கான செலவு மற்றும் அந்த கதைக்கு ஏற்றபடி தனது உடல் ஒத்துழைக்காது என நினைத்த ரஜினிகாந்த் படத்தை நிராகரித்து விட்டார்.
அதனால் இயக்குநர் தேசிங்கு பெரியசாமிக்கு இரண்டு ஆண்டுகள் வீணாகிப் போயின. அந்தப் படத்தின் கதையை கமல்ஹாசன் கேட்டு, அதனைத் தயாரிக்க முன்வந்த நிலையில், சிம்பு அந்தப் படத்தில் நடிப்பார் என அறிவிப்பு வெளியாகி ஓராண்டு ஆகும் நிலையில், இன்னமும் படப்பிடிப்பு ஆரம்பிக்கவில்லையே ஏன்? என்ற கேள்விக்கு தற்போது விளக்கம் கிடைத்திருக்கிறது.
வரலாற்றுப் படம் என்பதால் படத்துக்காக கடந்த ஓராண்டாக நீண்ட முடியை வளர்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார் சிம்பு. மேலும் தொடர்ந்து உடற்பயிற்சி மூலம் தனது உடற்கட்டை பராமரித்து வருவதாகவும் வெளிநாடுகளுக்குச் சென்று சில தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் இந்த ஆண்டு படப்பிடிப்புத் தொடங்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இன்னமும் அந்தப் படம் ஆரம்பிக்காதது மனவருத்தத்தை அளித்து வருகிறது.
ஆரம்பத்தில் வரலாற்றுக் கதை முழுவதும் வெறும் ரூ.30 கோடிக்கு மட்டும் எடுக்கும் அளவுக்கு முடிவு செய்திருந்த இயக்குநர் தேசிங்கு பெரியசாமி, தற்போது முழுப்படமும் வரலாற்றுப் பின்னணி கொண்ட படம்தான் என்றும் பட்ஜெட் மேலும் அதிகரிக்க இருப்பதாகவும் அண்மைய தகவல்கள் வெளியாகி வியப்பைத் தருகின்றன.
படத்திற்கான முன்னேற்பாடுகளைத்தான் ஓராண்டாக இயக்குநர் தேசிங்கு பெரியசாமி செய்து வருகிறார் என்றும் மாதிரி படத்தையே உருவாக்கி வருவதாகவும் வீண் செலவுகளை குறைத்து, குறைவான செலவில் பிரம்மாண்ட படத்தைக் கொடுப்பது என்ற முயற்சிகளில் உள்ள நிலையில், அந்த பணிகளும் நிறைவடையப் போவதாகவும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.