சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி உள்ள நடிகர் பாலா, புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து பல்வேறு உதவிகளை செய்துள்ளார். இதையடுத்து அவருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.
’கலக்கபோவது யாரு’, ‘குக் வித் கோமாளி’ உள்ளிட்ட சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பார்வையாளர்களை சிரிக்க வைத்தவர் பாலா. சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
ஏற்கெனவே பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டுள்ள அவர் தற்போது மழையால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கி உள்ளார்.
“கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போது பாதிக்கப்பட்டவர் களுக்கு உதவ விரும்பினேன். அப்போது என்னிடம் பணம் இல்லை.
“இப்போது வங்கிக் கணக்கில் ரூ.2.15 லட்சம் இருந்ததால் அதைக் கொண்டு பல குடும்பங்களுக்கு சிறிய அளவிலாவது உதவ முடிகிறது,” என்று சொல்லும் பாலா இலவச ஆம்புலன்ஸ், ஏழைக் குழந்தைகளின் கல்விச் செலவு, ஆதரவற்றோர் இல்லங்களுக்கு முடிந்த உதவிகள் செய்வது என பல்வேறு வகையிலும் சமூக தொண்டாற்றி வருகிறார்.