சென்னை: வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் இருந்து தங்களை மீட்கும்படி உதவி கேட்டு இன்னமும் பலர் குரல் கொடுத்து வருவதாகத் தெரிவித்துள்ள நடிகர் விஜய், தனது மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மிச்சாங் புயல், கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள், முதியவர்கள் உட்பட பலரும் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
“இந்தச் சூழலில், மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு முன்னெடுக்கும் மீட்புப் பணிகளில் தன்னார்வலர்களாகத் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். “கைகோப்போம்; துயர்துடைப்போம்,” என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ‘கலக்கப் போவது யாரு’, ‘குக் வித் கோமாளி’ சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான நடிகர் பாலாவும் உதவிக் கரம் நீட்டியுள்ளார்.
மிச்சாங் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கித் தவித்து வரும் பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1,000 வழங்கியுள்ளார்.