விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் நேற்று வெளியாகாதது குறித்து இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், விக்ரம், ரிது வர்மா, ராதிகா, பார்த்திபன், விநாயகன், சிம்ரன் உள்பட பலர் நடித்துள்ள படம், ‘துருவ நட்சத்திரம்’.
நீண்டகாலமாக தயாரிப்பில் இருந்த இந்தப் படம் அண்மையில்தான் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து வெளியீட்டுக்குத் தயாரானது.
அதனால் படம் நேற்று வெள்ளிக்கிழமையன்று வெளியாகும் என்று கவுதம் வாசுதேவ் மேனன் அறிவித்து இருந்தார்.
அதற்குள் இந்தப் படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கக்கோரி ‘ஆல் இன் பிக்சர்ஸ்’ நிறுவனத்தில் பங்குதாரராக உள்ள விஜய் ராகவேந்திரா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், “சிம்புவை நாயகனாக வைத்து ‘சூப்பர் ஸ்டார்’ என்ற படத்தை இயக்குவதற்காக, கவுதம் வாசுதேவ் மேனன் எங்கள் நிறுவனத்திடமிருந்து 2018ஆம் ஆண்டு 2 கோடியே 40 லட்சம் ரூபாய் முன்பணமாகப் பெற்றுக்கொண்டார்.
அந்த ஒப்பந்தப்படி பட வேலைகள் நடைபெறாத நிலையில் வாங்கிய முன்பணத்தை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் திருப்பித் தரவில்லை.
“எனவே எங்களிடம் பெற்ற தொகையைத் திருப்பி அளிக்கவேண்டும். இல்லையென்றால் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும்,” என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சி.சரவணன் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் ராகவேந்திரா சார்பில் பேசிய வழக்கறிஞர், “துருவ நட்சத்திரம் படத்தின் விநியோக உரிமையை விற்பனை செய்ததன் மூலம் கவுதம் வாசுதேவ் மேனன் பணம் பெற்றுள்ளார். இருந்தபோதிலும், எங்களுக்கு பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை,” எனக் கூறினார்.
அப்போது கவுதம் வாசுதேவ் மேனன் சார்பில் வழக்கறிஞர் ரேவதி மணிவண்ணன் ஆஜராகி, “படத்தின் வெளியீட்டுத் தேதி இரண்டு மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது.
“இந்த நிலையில் படத்துக்குத் தடை விதிக்குமாறு கடைசி நேரத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், பணத்தைக் கொடுக்காமல் படத்தை வெளியிடமாட்டோம் என்றும் கூறியிருந்தோம்.
“இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, “வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்குள் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும்.
“அவ்வாறு பணத்தைக் கொடுக்கவில்லை என்றால் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை இந்தியா மற்றும் வெளிநாடுகள் எங்கும் வெளியிடக்கூடாது,” என கவுதம் வாசுதேவ் மேனனுக்கு உத்தரவிட்டார். அதன்படி வெள்ளிக்கிழையன்று பணத்தைத் திருப்பித் தர முடியாததால் படம் நேற்று திட்டமிட்டபடி வெளியாகவில்லை.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கவுதம் வாசுதேவ் மேனன், “ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். ‘துருவ நட்சத்திரம்’ படத்தைத் திரைக்கு கொண்டு வரமுடியவில்லை. “நாங்கள் எங்களால் ஆன முயற்சிகளைச் செய்தோம். ஆனால், எங்களுக்கு இன்னும் ஓரிரு நாள்கள் தேவைப்படுகிறது.
“உலகம் முழுவதும் முறையான திரைகள் வழியாக அனைவருக்கும் நல்ல அனுபவத்தை தருவோம் என்று நம்புகிறேன். படத்துக்கு கிடைக்கும் ஆதரவும் மகிழ்ச்சியும் எங்களைத் தொடர்ந்து இயங்க வைத்திருக்கிறது. இன்னும் சில நாள்களில் நாங்கள் உங்களைக் காண வருவோம்,” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தை இயக்குநர் லிங்குசாமி பார்த்திருக்கிறார். படம் பற்றி அவர் தனது சமூக வலைத்தளத்தில், “மும்பையில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தைப் பார்த்தேன். மிகவும் சிறப்பாக இருந்தது. விக்ரமின் நடிப்பு பிரமாதமாக இருக்கிறது. விநாயக் அருமையாக நடித்திருக்கிறார். அனைவரும் திறமையாக நடித்துள்ளனர். படக்குழுவிற்கு வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.