இந்தி மொழியை திணிக்கக்கூடாது என்று பல்வேறு அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் குரல் கொடுத்து வரும் நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் தன் கருத்தை தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் அவர் 'கருப்பு திராவிடன், பெருமைக்குரிய தமிழன்' என்று குறிப்பிட்டுள்ளார். கருப்பு நிற ஆடையை அணிந்துள்ள அவரது புகைப்படமும் இந்தப் பதிவில் இடம்பெற்றுள்ளது.
இன்ஸ்டகிராமில் வெளியான இந்தப் பதிவும் புகைப்படமும் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி குறித்து கருத்து தெரிவித்ததற்காக இசையமைப்பாளர் இளைய ராஜாவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், யுவனின் பதிவும் விவாதத்தைப் பெரிதாக்கி உள்ளது.
தாம் திரையுலகில் நடிகையாக அறிமுகமான தருணத்தை அண்மைய பேட்டியில் பகிர்ந்துள்ளார் 'பிரேமம்' மலையாளப் படம் மூலம் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன்.
நடிகையாகும் எண்ணம் தமக்கு அறவே இல்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், கல்லூரியில் படித்தபோது தமது தோழி ஒருவர்தான் 'பிரேமம்' படத்திற்கான நடிப்புத் தேர்வில் தம்மை பங்கேற்க வைத்ததாக கூறியுள்ளார்.
"எங்கள் வீட்டு அருகில் ஒரு கலையரங்கம் இருந்தது. அங்கே நிறைய சிறார்கள் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியாக நாடகங்களை அரங்கேற்றுவார்கள். அவற்றைப் பார்ப்பதற்காக நானும் அங்கு செல்வேன்.
"கல்லூரியில் சேர்ந்த பிறகு 'பிரேமம்' மலையாளப் படத்துக்கான நடிகை தேர்வில் பங்கேற்றபோது என் தோற்றம் பிடித்திருந்தாலும், வசனம் பேச தடுமாறுவதாக இயக்குநர் கூறினார். அதனால் சில நாள்கள் நன்கு பயிற்சி செய்த பிறகு மீண்டும் தேர்வுக்குச் சென்று தடுமாற்றம் இல்லாமல் வசனம் பேசினேன். அதன் பலனாக இன்று ரசிகர்கள் அறிந்த நடிகையாக வளர்ந்துள்ளேன்," என்று கூறியுள்ளார் அனுபமா.
காலஞ்சென்ற நடிகர் விவேக்கின் பெயர் சென்னையில் உள்ள ஒரு தெருவுக்கு வைக்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் மரக்கன்றுகளை நடும் உன்னத பணியை மேற்கொண்டார் விவேக். இந்நிலையில் எதிர்பாராத விதமாக அவர் காலமானார். விவேக் விட்டுச் சென்ற பணியை அவரிடம் மேலாளராகப் பணியாற்றிய செல் முருகன் தொடர்ந்து வருகிறார். இதற்காக அவர் 'விவேக் பசுமை கலாம்' என்ற அமைப்புடன் இணைந்து செயல்படுகிறார்.
"தமிழகமெங்கும் மரக்கன்றுகளை நட்டு வைத்தவர் விவேக். அந்த மரங்களின் வழியாக எப்போதும் அவர் நம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பார். தமிழக முதல்வரிடம் விவேக் பெயரை சென்னையில் உள்ள ஒரு தெருவுக்கு சூட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். உரிய முறையில் கடிதம் கொடுத்தால் நிச்சயமாக அதைச் செய்யலாம் என்று முதல்வரும் கூறியுள்ளார்," என நடிகர் சங்கத் துணைத்தலைவர் பூச்சி முருகன் கூறியுள்ளார்.
வெளியீடு கண்ட நான்கு நாள்களிலேயே சுமார் ரூ.552 கோடி வசூல் கண்டு சாதனை படைத்துள்ளது 'கேஜிஎஃப்' திரைப்படம். தெலுங்கில் மட்டும் ரூ.50 கோடி வசூலைப் பெற்றதை அடுத்து, ரஜினியின் எந்திரன் படத்தின் சாதனையையும் 'கேஜிஎஃப்' முறியடித்துள்ளது.
'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' ஆகிய படங்களை இயக்கி உள்ள இயக்குநர் மாரி செல்வராஜின் முதல் கவிதைத் தொகுப்பை நடிகர் வடிவேலு வெளியிட்டுள்ளார். இத்தொகுப்புக்கு 'உச்சினியென்பது' என்று தலைப்பு வைத்துள்ளார் மாரி. ஏற்கெனவே, 'தாமிரபரணியில் கொல்லபடாதவர்கள்', 'மறக்கவே நினைக்கிறேன்' ஆகிய இரு நூல்களை எழுதியுள்ளார் மாரி செல்வராஜ். அவற்றுக்கு வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
தற்போது இவர் இயக்கும் 'மாமன்னன்' படத்தில் நடித்து வருகிறார் வடிவேலு.